புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இவர்களுக்கு வயது 26. இதில் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.




இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தவறான சிகிச்சை தந்ததால் இளைஞர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடல்நல ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்ததில் பிரச்சினை உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.


மருத்துவமனையை மூட உத்தரவா ?


இதையடுத்து மருத்துவத்துறை அமைச்சர் உரிய விசாரணை குழுவை அமைத்திருந்த நிலையில், விசாரணை குழு விசாரணை அறிக்கையினை 2 தினங்களுக்கு முன்னதாக மருத்துவத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அறுவை சிகிச்சை செய்வதற்கான  போதிய வசதிகள் மருத்துவமனையில் இல்லை என தெரிய வந்தது.




அதேபோன்று உயிர் காக்கும் சிகிச்சை மேற்கொள்வதற்கான உபகரணங்களும் இல்லை என ஆய்வு முடிவை தெரிய வந்ததாக தெரிகிறது. அதேபோன்று பெற்றோர் தரப்பிலும்  வைக்கப்பட்ட அறுவை சிகிச்சைக்கு முன்பு சரியான தகவல்கள் தரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டதாக ஆய்வு முடிவு தெரிய வந்துள்ளது. அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சம்பந்தப்பட்ட குழு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மருத்துவமனையில் நடப்பது என்ன ?  


சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தற்பொழுது நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் பிற மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களாக மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று மருத்துவமனை ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் வழங்கும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்பொழுது மருத்துவமனை தற்காலிகமாக மூட  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.