பாலியல் வன்கொடுமைக்கு மறுத்ததால் 7 வயது சிறுமி தீயிட்டு எரிக்கப்பட்ட நிகழ்வில், குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இதற்கெனக் கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


இதுகுறித்துப் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


’’தேனி மாவட்டம் எரசக்க நாயனூரில் 7 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஒருவன், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறுமியைத் தீயிட்டு எரித்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி 65% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாஎ. இந்த கொடிய நிகழ்வு கண்டிக்கத்தக்கது!


சிறுமியைச் சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்துள்ளான். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றங்களுக்கான தண்டனை குறித்த அச்சம் இல்லாததுதான் குற்றங்கள் பெருகுவதற்குக் காரணம் ஆகும்!


பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியம். அதற்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் கட்டாயம்.  ஆனால், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ நீதிமன்றங்கள் உள்ளன. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது!


தமிழ்நாட்டில் போக்சோ சட்டப்படி தொடரப்பட்ட 14,380 வழக்குகளில் 7,187 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களைத் தொடங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும்!’’


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 


பின்னணி என்ன?


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன், அவரது மனைவி சபரி சூர்யா. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரும் சேலத்தில் தங்கி வேலை செய்து வருவதால், சிறுமி எரசக்கநாயக்கனூரில் உள்ள சபரி சூர்யாவின் தாயார் வீட்டில் தங்கி அங்கு உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சபரி சூர்யாவின் தாயார் அமலா புஷ்பம் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு ஆயாவாக பணியாற்றி வருகிறார்.




ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி தனது பாட்டியுடன் அவர் வேலை செய்யும் அங்கன்வாடி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாட்டி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சிறுமி பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைக் கேட்டு அதிர்ந்து போன அமலா புஷ்பம் விரைந்து சென்று சிறுமியை பார்த்துள்ளார். அப்போது அவரது உடையில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்துள்ளது.


அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அமலா புஷ்பம் உடனடியாக தீயை அணைத்து சிறுமியை மீட்டார். ஆனால் சிறுமி மீது பற்றிய தீயினால் வயிற்றுப் பகுதி மற்றும் கால் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக சிறுமியை அவரது பாட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு 45% சதவீதம் உடலில் தீக்காயத்துடன் இருக்கும் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண