நில எடுப்பு அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்யும் வரை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் காலவரையற்ற தொடர் பள்ளிப்புறக்க கணிப்பு போராட்டத்தை துவங்கினர்.

 

பரந்தூர் விமான நிலையம் ( Chennai greenfield airport, Parandur )

 

காஞ்சிபுரம்  (Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை துவக்கி உள்ளது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான இடங்களை கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.

 


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்.


 

தேவையான நிலங்களை கையகப்படுத்த அனுமதி

 

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து, கிராமம் முழுவதும் அகற்றப்பட உள்ள ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து 493 வது நாட்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு, ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடும், நிர்வாக செலவுடன் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.



 

5,746 ஏக்கர் நிலம் 

 

மேலும், நிலம் எடுப்புக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட 326 பேர் நியமிக்கப்பட் டுள்ளனர்.இதற்கிடையே, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு, பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத் ததமிழக தொழில் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த அக்டோபர் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால், வெளியில் தெரிவிக்கப்படாமல் இருந்தது.



 

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல்

 

இதுகுறித்து தகவல் அறிந்த ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் பசுமை வெளி விமானம் நிலையம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்த வெளியிட்டு உள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்யக்கோரியும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரியும் இன்று முதல் காலவரையற்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.

 

117 மாணவ, மாணவிகள்

 

ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே வந்துள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் 117 மாணவ மாணவிகள் யாரும் வராததால் பள்ளி வளாகமும், வகுப்பறைகளும், வெறிச்சோடி கிடைக்கின்றது. மேலும், பள்ளி மாணவ மாணவிகளுக்காக வழங்க காலை உணவு திட்டத்தின் கீழ் செய்து வைக்கப்பட்ட உணவுகளும் வீணாகிப் போனது குறிப்பிடத்தக்கது.