குடும்ப பிரச்சனை ; இளம் பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த முன்னாள் நீதிமன்ற உதவியாளருக்கு அடி - உதை
கணவன் , மனைவி குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இளம் பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்திய ஓய்வு பெற்ற நீதிமன்ற உதவியாளருக்கு அடி உதை

கணவரின் டார்ச்சர் - காவல் நிலையத்தில் புகார்
சென்னை புழல் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் இரு வருடங்களுக்கு முன்பு மகேஷ் கண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம் பெண் மூன்று மாதங்களாக கணவரை பிரிந்து தன் தாயுடன் வசித்து வருகிறார்.
இளம் பெண்ணுக்கு கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் பட்டா பிராம் காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணின் கணவர் மகேஷ் கண்ணா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன்
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி அன்று இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர் உன்னுடைய கணவர் மகேஷ் கண்ணாவின் வழக்கறிஞர் என்றும் உன் குடும்ப பிரச்சினையை தான் தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இளம் பெண்ணிடம் உன்னுடன் பேச வேண்டும் ஆகையால் பெரம்பூர் பகுதியில் உள்ள சங்கீதா ஓட்டலுக்கு வருமாறு கூறியதன் பேரில் அவரும் அங்கு சென்றுள்ளார்.
இரவு ஓட்டல் அறைக்கு வர வேண்டும்
ஓட்டலில் இளம் பெண் வழக்கறிஞரை சந்தித்து பேசிய போது அவர் குடும்ப பிரச்சினையை நான் பார்த்து கொள்கிறேன். இரவு என்னுடன் ஓட்டல் அறைக்கு வரவேண்டும் என்று ஆபாசமாக பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வழக்கறிஞரை பிடித்து செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் பிடிப்பட்ட நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது அவர் வியாசர்பாடி எம்.கே.பி நகரை சேர்ந்த ஞான பிரகாஷ் ( வயது 68 ) என்பதும் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி உதவியாளராக ( டபேதார் ) பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.
பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நபர்
மேலும் முதியவர் ஞான பிரகாஷ் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன்படுத்த அவரை உல்லாசத்திற்கு அழைத்து தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீஸார் ஓய்வு பெற்ற நீதிமன்ற உதவியாளர் ஞானபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.























