கலந்தாய்வு கூட்டம்‌ 

 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி  உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்‌ நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வருகையின் போது அதனை எதிர்கொள்வது குறித்து மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

ஒரே நாடு ஒரே தேர்தல்

 

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசிப்பீர்களா? என கேள்வி கேட்டதற்கு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆரம்பத்தில் இருந்தே நான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன். அதனை செயல்படுத்த முடியாது. அது தேவையற்றது. காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நாங்கள் உச்சநீதிமன்றம் தான் செல்ல வேண்டும் என்றால், பாராளுமன்றம், சட்டமன்றம் எதற்கு? எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமானால் நாட்டை ஆள்வது நீதியரசர்களா? பிரதமரா? என கேள்வி எழுப்பினார்.



 

கடந்த பத்தாண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது‌. ஒன்பதரை ஆண்டுகளாக மசோதா தாக்கல் செய்யாமல் தற்போது பெண்களுக்கு 33% ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்திருப்பது ஏன்? இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தலை வைத்து கொண்டு பெண்கள் மீது உங்களுக்கு ஏன் திடீர் அக்கறை என்றார். காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து பேசுகையில், தமிழகத்தில் எங்களுடைய வளங்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். ஆனால் தண்ணீரை வழங்க மறுக்கிறீர்கள்.

 

நீங்கள் அறிவாளிகளா?

 

கேட்டால் எங்களுக்கே போதிய அளவில் தண்ணீர் இல்லை என கூறுகிறீர்கள். இதை ஏன் யாரும் கேட்பதில்லை, நாங்கள் கேட்டால் எங்களை பாசிச வாதிகள் என கூறுகின்றனர். நீங்கள் அறிவாளிகளா? எங்களை பார்த்தால் பைத்தியகாரர்களாக தெரிகிறதா? என்றார். நாங்களும் இனிமேல் இப்படி தான் செய்வோம், நெய்வேலி மின்சார மேலாண்மை வாரியம், மின்சார ஒழுங்காற்று குழு அமைத்து இந்த ஆட்டத்தை நான் ஆடி காட்டவில்லை என்றால் நான் பிரபாகரனின் மகன் இல்லை என ஆவேசமடைந்தார். 

 

அவரிடம் கேட்டு சொல்லுங்கள்

 

மேலும், தமிழர் முன்னேற்றம் படை தலைவர் வீரலட்சுமியின் கணவர் பாக்ஸிங்கிற்கு அழைத்தது குறித்து கேட்டபோது, அவர் பகலில் பேசினால் பாக்ஸிங்கிற்கு போகலாம், ஆனால் அவர் 7-மணிக்கு மேல் பேசுகிறார். அவர் அதனை பதிவு செய்வது தெரிகிறது. அதனை வெளியிட்டு இதுபோன்ற கேள்விகள் வரும் என்பதால் தான் செல்போனை அணைத்தேன்.

 

அவர் என் கையால் தான் சாவது என முடிவெடுத்தால் நான் அதனை எதிர்கொள்கிறேன். அவரிடம் கேட்டு சொல்லுங்கள் இடம், நேரம் சொன்னால் எப்போது வேண்டுமானாலும் வருவார் என கூறுங்கள் என்றார். முதலில் என்னிடம் நேரில் வந்து நில்லு, அப்பறம் சண்டை போடலாம் என தெரிவித்தார். மேலும், இதுபற்றி பேசும் போது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா? சிரித்து விட்டு போங்கள் என பேசினார்.