MTC: புறநகர் ரயில் சேவை குறைப்பு... உதவிக்கு வந்த MTC! நோட் பண்ணிக்கோங்க மக்களே...
புறநகர் சேவை குறைக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் அடுத்த 45 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை குறைக்கப்பட உள்ள நிலையில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக மாநகர போக்குவரத்து தெரிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள்:
சென்னை எழும்பூர் ரயில் மறுசீரமைப்பு பணிகள் நடைப்பெறுகிறது, இதில் முக்கியமாக மேற்கூறை அமைக்கும் பணிகள் நடைப்பெற உள்ளது. இதன் காரணமாக எழும்பூரில் இருந்து இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவையில் மாற்றம்:
இரவில் மட்டும் நடந்த பணிகள் தற்போது பகல் நேரத்தில் நடைப்பெற உள்ளதால் அடுத்த 45 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக சென்னை கடறகரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் சேவை குறைக்கப்பட உள்ளது. மேலும் நடைமேடை 11 மற்றும் 10-ல் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள் வரும் 20ஆம் தேதி முதல் நடைமேடை 5 முதல் 6வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட உள்ளது.
உதவிக்கு வந்த MTC:
புறநகர் சேவை குறைக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் அடுத்த 45 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து எம்டிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் வரும் பிப்ரவரி 20-ந் தேதி முதல் ஏப்ரல் 05 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தென்னக இரயில்வே மா.போ.கழகத்திற்கு தெரிவித்துள்ளது.
50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மா.போ.கழகம் வரும் 20.02.2026 முதல் 05.04.2026 வரை இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண்.E18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18A-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
🚨🚨🚨 பயணிகள் கவனத்திற்கு!
— MTC Chennai (@MtcChennai) February 18, 2026
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் வரும் பிப்ரவரி 20-ந் தேதி முதல் ஏப்ரல் 05 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது… pic.twitter.com/Y6MvTNOcXd
கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
























