’சிக்னல் போட்டா எனக்கென்ன’ சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் மாநகர பேருந்துகள்..!

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதுபோல், மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது

Continues below advertisement

சென்னையில் எங்காவது சாலையில் மஞ்சள் விளக்கு எரிந்ததும் மாநகர பேருந்துகள் நிற்கின்றதா ? என கேட்டால் பெருவாரியான பதில், சிகப்பு விளக்கு போட்டாலும் பேருந்து ஓட்டுநர்கள் அதனை மதிப்பதில்லை என்றே வரும்.

Continues below advertisement

சிக்னல்கள் என்பது சாமானிய மக்களுக்குதான் அரசு பேருந்து ஓட்டும் எங்களுக்கு இல்லை என்பது அவர்களின் பெரும்பாலானோர் எண்ணம். விபத்து ஏற்பட்டாலும் கூட எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பதுமாதிரி ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கி வருவது வாடிக்கையாகி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தும் பேருந்துகளை தான் போட்ட சொந்த ரோட்டில் ஒட்டுவதுபோல இயக்கி வரும் ஓட்டுநர்களால் சாலையில் பயணம் செய்வோர் மட்டுமின்றி, பேருந்தில் பயணம் செய்வோரும் பயத்தில் நடுங்கி வருகின்றனர்.

ஒவ்வொருநாளும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் பாதசாரிகளிடம் எத்தனை எத்தனை வசவு வாங்கினாலும், அதனை காதிலும் வாங்கிக்கொள்ளாமலும், கண்டும் காணாதது மாதிரியும் பேருந்துகளை ஓட்டி வருவது பொதுமக்களிடையே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சில மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமே போக்குவரத்து விதிகளையும், சிக்னல்களையும் மதித்து செயல்படும் நிலையில், பெரும்பாலான ஓட்டுநர்கள் ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என பஸ்-சை ஓட்டுவதால் பாதசாரிகள் பதறிப்போய் உள்ளனர்.

சிக்னல்களை மதிக்காமல் சிவப்பு விளக்கை மீறி செல்லும் மாநகர பேருந்துகளை பின் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் நிகழ்வு சென்னையில் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அரசு பேருந்துகள் சாலை விதிகளையும் சிக்னல்களையும் மதித்து நடந்தாலே, பின் தொடர்ந்து வரும் பெரும்பாலான வாகன ஓட்டிகளும் சிக்னல்களை மதிக்கும் நிலை ஏற்படும்.

போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களிடம் எப்படி அபராதம் விதிக்கப்படுகிறதோ, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ அதே மாதிரி மாநகர பேருந்து ஓட்டுநர்களும் விதிகளை மீறி பேருந்தை இயக்கும் போது அவர்கள் மீது இதே மாதிரி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே சிக்னல்கலை மதித்து செயல்படுவார்கள் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சவுந்தரராஜனிடம் கேட்டபோது, ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இதனை பெரிதுப்படுத்தி பெரும்பாலான ஓட்டுநர்கள் சிக்னல்களை மதிப்பதில்லை என தவறாக சித்தரிக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்து செல்லவில்லையென்றால் ஓட்டுநர்களுக்கு மெமோ கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதனை தவிர்ப்பதற்காக ஒரு சிலர் இதுபோன்று சிக்னல் விதிகளை மீறுவார்களே தவிர, பெரும்பாலான ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மதித்துதான் பேருந்துகளை இயக்கி வருகின்றனர் என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola