சென்னை எல்லை விரிவாக்கம்: 5 புதிய பணிமனைகள் எங்கு வருகிறது? பேருந்து சேவை சிக்கல் தீருமா?
சென்னை மற்றும் புற நகரில் கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக , ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க, மாநகர போக்குவரத்து கழகம் இடங்களை தேர்வு செய்துள்ளது.

சென்னை எல்லை விரிவாக்கம்
மாநகர போக்குவரத்து கழகம் என்பது சென்னை மாநகரிலும் , அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்களுக்குப் பேருந்து சேவைகளை வழங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமாகும்.
மக்கள் தொகைக்கு ஏற்ப, அவ்வப்போது போக்குவரத்து துறையில் சென்னை மற்றும் புறநகரில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க வசதியாக தற்போது ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க , மாநகர போக்குவரத்து கழகம் இடங்களை தேர்வு செய்துள்ளது.
பயணிகள் அவதி
சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவாக்கப்பட்டு வருகிறது. தற்போது 700 வழித்தடங்களில் 3,233 மாநகர சென்னையின் எல்லை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு , திருவள்ளூர், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் என மாநகர போக்குவரத்து கழகத்தின் எல்லை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும் போதிய அளவில் பேருந்துகள் இயக்காததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் பேருந்து இயக்க வசதியாக, ஐந்து இடங்களில் புதிதாக பணிமனைகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது ;
சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் தொழிற் சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது. வரும் 2032 - ல் மாநகர பேருந்துகளின் தேவை 7,578 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் கட்டுவதற்கு இடங்களை தேர்வு செய்துள்ளோம்.
5 இடங்களில் புதிய பணி மனை
திருவள்ளூர், வெளிவட்ட சாலை பகுதியில் வரதராஜபுரம், தையூர், தரமணி, பாடியநல்லுார் அருகில் ஆட்டந்தாங்கல் என, தேர்வு செய்யப்பட்ட இடங்களில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்க உள்ளோம். இதையடுத்து டெண்டர் வெளியிட்டு, பேருந்து பராமரிப்புக்கான அதி நவீன கருவிகளுடன் புதிய பணிமனைகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என இவ்வாறு கூறினர்.





















