Chennai Corporation: ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
Chennai Corporation TVK Vs DMK: நெருங்கி வரும் பருவமழை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியில், ஆட்சி மாற்றத்தால் சென்னை கவுன்சிலர்கள் பலர் வீட்டிலேயே முடங்கி இருப்பது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

Chennai Corporation TVK Vs DMK: ஆட்சி மாற்றத்தால் சென்னை கவுன்சிலர்கள் பலர் பணிகளை மேற்கொள்ளாததால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து புறக்கணிக்கும் மேயர் பிரியா..!
சட்டமன்ற தேர்தல் முடிவில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தவெக ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று, நகராட்சி நிர்வாகத்தையும் தன் வசமே வைத்துள்ளார். அதன் கீழ் வரும் சென்னை மாநகராட்சியின் மேயரான பிரியா, இதுவரை முதலமைச்சரை சந்திக்கவில்லை. காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாக பணிகளையும் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. இதேபாணியை தான் துணை மேயர், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களும் நிர்வாக பணியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சிலர் பெயரளவில் மட்டுமே அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனராம்.
நிர்வாகத்தை கையிலெடுத்த அதிகாரிகள்:
சென்னை மாநகராட்சியின் ஆணையராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள சமீரனையும், மேயர் உள்ளிட்ட யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அதிகாரிகளிடமும் முன்பு போல் வேலை வாங்குவதும் இல்லையாம். இதையடுத்து ஒட்டுமொத்த நிர்வாக பணிகளையும் அதிகாரிகளே முன்னெடுக்க தொடங்கியுள்ளனராம். உள்ளாட்சி பிரதிநிதிகள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் தொடர்ந்தால், செயல்பாடுகள் இல்லை என குறிப்பிட்டு உள்ளாட்சி நிர்வாகத்தை அரசு கலைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் திட்டப்பணிகள் முறையாக நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மீள முடியாமல் தவிக்கும் திமுக..!
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகள் திமுக வசம் தான் உள்ளன. மற்ற 47 வார்டுகள் மட்டுமே அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் உள்ளன. இந்நிலையில் கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட தங்கள் கட்சி தலைவரான ஸ்டாலின் தோல்வியுற்றதை கவுன்சிலர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். இதனால் தான் ஆட்சி மாற்றத்திற்கு பின், அவர்களது செயல் பாடு முடங்கியுள்ளதாம். அதோடு, தாங்கள் எடுக்கும் முன்னெடுப்பிற்கு புதியதாக அமைந்துள்ள அரசு ஆதரவு அளிக்குமா? என்ற சந்தேகமும் திமுக கவுன்சிலர்களிடம் பரவலாக உள்ளதாம்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
கவுன்சிலர்கள் பணியாற்றினாலும், வார்டு குழு கூட்டங்கள் கூட நடத்தப்படவில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 63வது வார்ட் கவுன்சிலர் சிவராஜசேகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பொக பேசுகையில்“ மாநகராட்சி மேயர் பிரியா கவுன்சில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டம் நடத்த அவர் தவிர்ப்பதால், வார்டு குழு கூட்டங்களையும் கூட்ட முடியாமல், மண்டலக்குழு தலைவர்கள் உள்ளனர். மாநகராட்சியின் வளர்ச் சிக்கு உள்ளாட்சி பிரதிநி திகளின் பங்கு முக்கியம். மாநகராட்சி நிர்வாகத்தை நடத்த, மேயர் முயற்சி எடுக்காததால், கவுன்சிலர்கள் இந்த நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை கவுன்சிலர்கள் விவரம்:
| கட்சிகள் | கவுன்சிலர்கள் |
| திமுக | 153 |
| அதிமுக | 15 |
| காங்கிரச் | 13 |
| மார்க்., கம்யூனிஸ்ட் | 4 |
| விசிக | 4 |
| மதிமுக | 2 |
| பாஜக | 1 |
| அமமுக | 1 |
| இந்திய கம்யூனிஸ்ட் | 1 |
| IUML | 1 |
| சுயேச்சைகள் | 5 |
அச்சத்தில் சென்னை மக்கள்:
பருவ மழை நெருங்கி வரும் நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் போன்றவை, மக்கள் பிரதிநிதிகளின் பங்கெடுப்பு இல்லாததால் முடங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக மாநகராட்சி வளர்ச்சி பணிகள் எதுவும் கவுன்சிலர்களால் பெரிய அளவில் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போதும் அதே நிலை தொடர்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பெரிய அளவில் இல்லாததால் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. அதேநிலை இந்த முறையும் நீடிக்கும் என் உறுதிபட தெரிவிக்க முடியாததால், நிலுவையில் உள்ள பணிகளை முழு வேகத்தில் முடுக்கிவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Before You Go
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
ட்ரெண்டிங் செய்திகள்























