நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளை,  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.




பின்னர், அமைச்சர் கே.என். நேரு அமைச்சர் தெரிவித்ததாவது:-


சென்னைக்கு அருகே வற்றாத நீராதாரங்கள் இல்லாத காரணத்தினால், சென்னை பெருநகரம் வடகிழக்கு பருவமழையை பெரிதும் சார்ந்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்க்கும் காலங்களில் நகரின் நீண்ட கால குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைத்துள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், சென்னை மாநகரின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதில் பெரும்பங்காற்றி வருகின்றன.




 


மீஞ்சூரில் நாளொன்றுக்கு...


தமிழ்நாட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் முதல் நிலையம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2010-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.இரண்டாவது நிலையமாக நெம்மேலியில் 805 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் 2010 ஆம் அன்று அடிக்கல் நாட்டப்பட்டு 2013-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது.இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தென் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் மற்றும் தகவல் தொழில் நுட்ப வளாகத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்கு குழாய் கட்டமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டு, சுமார் 10 இலட்சம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.


ஜுலை 2023-க்குள் முழுமையாக


அதனைத் தொடர்ந்து, நெம்மேலியில்,  நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும், கடல்நீரை நிலையத்திற்கு உள் கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய் (Offshore works; Intake and Outfall Pipeline works), கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Seawater Intake Sump), காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி (Dissolved Air Flotation), வடிகட்டப்பட்ட கடல்நீர்த்தேக்கத் தொட்டி (Clarified Water Tank), வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் (Clarified Water Pumping Station), நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம் (Ultra Filter & Reverse Osmosis Process Building), சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி (Product Water Tank), சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம் (Product Water Pumping Station), நிர்வாக மற்றும் காப்பாளர் கட்டிடம் (Administration Building), கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு (Sludge Thickener), செதிலடுக்கு வடிகட்டி (Lamella Clarifier), பிரதான மின் நிலையம் (Main Electrical Building), புவியியல் தகவல் முறைமை (GIS Building), நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் உந்து நிலையம் (Ultra Filter & Reverse Osmosis Pump House), சுண்ணாம்பு செறிவூட்டும் நிலையம் (Limestone Filters Building) போன்ற கட்டுமானப் பணிகளை ஜுலை 2023-க்குள் முழுமையாக முடித்திட அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


9 இலட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்


மேலும், இத்திட்டத்தில், கடல்நீரை  குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பல்லாவரம் வரை 49 கி.மீ நீளத்திற்கு 1400/1200/300 மி.மீ விட்டமுள்ள குழாய் பதிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படும் குடிநீர், உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசன்பேட்டை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதியில் உள்ள சுமார் 9 இலட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் என  தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பேரூரில்  நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.ஆர்.ராகுல் நாத்,  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.