Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
தாம்பரம் அரசு காப்பகத்தில், மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததையடுத்து, காப்பக பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் அரசு காப்பகத்தில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த நிலையில், அரசு காப்பகங்களில் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக, தமிழ்நாடு அரசு ஒரு முடிவை எடுத்துள்ளதாக, அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அந்த முடிவு என்ன.? பார்க்கலாம்.
அமைச்சர் கீதா ஜீவன் கூறியது என்ன.?
சென்னை தாம்பரத்தில், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயஙகி வரும் அரசு சேவை இல்லத்தில், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது மட்டுமல்லாமல், அவர் மீது தாக்குதலும் நடந்துள்ளது. இதில் கால் முறிவு ஏற்பட்ட நிலையில், அச்சிறுமிக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அந்த சிறுமியை சந்தித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சிறுமியை பார்த்துவிட்டு, அவரது தாயாரிடமும் பேசிவிட்டு வந்ததாக தெரிவித்தார்.
அந்த சந்திப்பின்போது, சமூக வலைதளங்களில் ஊர், பெயர் எல்லாம் வந்துவிட்டதாக, சிறுமியின் தாயார் வேதனை தெரிவித்ததாக கூறிய அமைச்சர், பெயர், ஊர் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், அது சட்டப்படி குற்றம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சம்பவம் நடைபெற்ற சேவை இல்லத்தில் 8 கண்காணிப்பு கேமராக்கள் இருந்ததாகவும், புகாரின் பேரில் போலீசார் அந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, அங்குள்ள காவலாளியை கைது செய்ததாக அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்தார்.
“பாதுகாப்பிற்காக பெண் காவலர்கள் நியமனம்“
அதோடு, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில், மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்கும் வகையில், இந்த அரசு காப்பகத்தில், 3 பெண் காவலர்களை நியமிக்க மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து, தகுதி வாய்ந்த பெண் காவலர்கள் அங்கு உடனடியாக பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேபோல், முதலமைச்சர் அறிவுரையின்படி, அரசு பெண்கள், குழந்தைகள் காப்பகங்களிலும், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இல்லங்களிலும் பெண் காவலர்களை நியமிக்க சமூக நலத்துறை முடிவெடுத்துள்ளதாகவும், அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து அமைச்சர் விளக்கம்
பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த காப்பகத்தில், 130 பிள்ளைகள் தங்கி படித்து வருவதாகவும், காலை 5.30 மணிக்கு அனைவரும் படிக்க உட்காருவது வழக்கம் என்றும், சம்பவத்தன்று சிறுமியும் படிக்க வந்ததாகவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சம்பவத்தன்று காப்பகத்தின் வார்டன் விடுமுறையில் இருந்ததாகவும், சமையல் செய்பவர் மட்டும் மாணவிகளுடன் இருந்ததாகவும், அவர் வெளியில் சென்ற சமயத்தில், காவலாளி விடுதிக்குள் வந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
மாணவி அங்கு சேர்ந்து 5 நாட்களே ஆவதாகவும், சம்பவம் தொடர்பாக அனைத்து மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த காப்பகம் பாதுகாப்பான இடமாக இருந்தாலும், அங்கு பாதுகாப்பில் இருந்த அரசு ஊழியரே இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டது மிகவும் துரதிஷ்டவசமானது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் வேதனை தெரிவித்தார்.
எனினும், காப்பகங்களில் பெண் காவலர்களை நியமிக்கும் அரசின் முடிவு நல்ல முடிவாகத் தான் இருக்கிறது.





















