திருவொற்றியூர் விம்கோ நகர் - மாதவரம் இடையே மெட்ரோ ரயில் திட்டம் !! சென்னையில் 27 திட்டங்கள் !!
சென்னை விம்கோ நகர் - மாதவரம் அசிசி நகர், 11 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம் - பேருந்து போக்குவரத்து திட்ட விரிவாக்கம்
சென்னை பெருநகரில் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு , 468 கோடி ரூபாயில், 1,000 மின்சார பேருந்துகள் வாங்குதல் , திருவொற்றியூர் விம்கோ நகர் - மாதவரம் அசிசி நகர் இடையே 11 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட, போக்குவரத்து மேம்பாட்டுக்கான 27 திட்டங்களுக்கு, 3,366 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு, போக்குவரத்து குழுமமான 'கும்டா' கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னையில், போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைக்க, 'கும்டா' என்ற போக்குவரத்து குழுமம் துவங்கப்பட்டது. முதல்வர் தலைமையிலான இந்த குழுமம், போக்குவரத்து சார்ந்த திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது. இந்த வகையில், அடுத்த 25 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல் திட்டத்துக்கு, அரசின் ஒப்புதல் சமீபத்தில் பெறப்பட்டது.
ஒவ்வொரு துறை வாயிலாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த விபரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், 2026 - 27 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட், வரும் 17ம் தேதி, தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில், சென்னை பெருநகரின் போக்குவரத்து மேம்பாட்டுக்காக அறிவிக்க வேண்டிய திட்டங்களை, கும்டா பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரை பட்டியலை, கும்டா உறுப்பினர் செயலர் ஜெயகுமார், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷாவுக்கு அனுப்பியுள்ளார்.
பேருந்து போக்குவரத்து வசதி
மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, 468 கோடி ரூபாயில், 1,000 மின்சார பேருந்துகள் கொள்முதல் மாநகர் போக்குவரத்து கழகம் வாயிலாக, 10 இடங்களில், 350 கோடி ரூபாயில் புதிய பணிமனைகள்.
10 பணி மனைகளில், 350 கோடி ரூபாயில் மினி பேருந்துகளுக்கான இடவசதி ஏற்படுத்துதல்.
மெட்ரோ ரயில் முதல் கட்ட வழித்தடத்தில், 41 ரயில் நிலையங்களை சுற்றி, மோட்டார் இல்லாத போக்குவரத்து வசதிகளை, 360 கோடி ரூபாயில் ஏற்படுத்துதல்.
மெட்ரோ ரயில் நிறுவனத்துக்காக, 150 மைக்ரோ பேருந்துகள், 70 மினி பேருந்துகள், 55 கோடி ரூபாயில் வாங்க வேண்டும்.
மெட்ரோ ரயில் திட்டங்கள்
திருவொற்றியூர் விம்கோ நகர் - மாதவரம் அசிசி நகர், 11 கி.மீ., துாரம் மற்றும் கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, 27 கி.மீ., இடையே மெட்ரோ ரயில் சேவைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 4 கோடி ரூபாய்
சாலை விரிவாக்கம்
கிழக்கு கடற்கரை சாலை - திருப்போரூர் சாலையை, 3.3 கி.மீ., துாரம், 33 கோடி ரூபாயில் விரிவாக்கம்
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையை, 5 கி.மீ., தொலைவுக்கு, 50 கோடி ரூபாயில் நான்கு வழி பாதையாக விரிவாக்கம் செய்தல்.
சென்னை - திருத்தணி ரேணிகுண்டா சாலை 22 கி.மீ., தொலைவுக்கு, 440 கோடி ரூபாயில் நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்தல்.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருமழிசைக்கு, 1.9 கி.மீ., துாரம், 15 கோடி ரூபாயில், புதிய சாலை தொடர்பு ஏற்படுத்துதல்.
தாம்பரம் இரும்புலியூர் அருகில் ஜி.எஸ்.டி., சாலையை கடக்க, 5 கோடி ரூபாயில் நடை மேம்பாலம் அமைத்தல் உட்பட, 27 பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு மொத்தம், 3,366 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவை, சென்னை பெருநகர் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்பதால், இந்த பரிந்துரைகளை ஏற்று, பட்ஜெட்டில் தமிழக அரசு நிதி ஒதுக்கி, அறிவிப்புகளை வெளியிடும் என கும்டா அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.























