வடசென்னையில் கஞ்சா விற்பனை

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேதாஜி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது அரை கிலோ கஞ்சா சிக்கியது.

Continues below advertisement

இதையடுத்து , போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 6 வது தெருவைச் சேர்ந்த விஷ்ணுபிரியன் ( வயது 20 ) என்பதும், இவரது தந்தை பாபா ஜெகன் ( வயது 52) மதிமுக ஆர்கே நகர் பகுதி செயலாளர் என தெரிய வந்தது.

இவருக்கும் சாத்தாங்காடு அண்ணாமலை நகர் 4 - வது தெருவைச் சேர்ந்த கீதா ( வயது 37 ) என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது. மேலும் கீதா , பாபா ஜெகன் உதவியுடன் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, எண்ணூர் உட்பட வட சென்னை பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.

Continues below advertisement

4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

இதனிடையே, விஷ்னுபிரியன் அளித்த தகவலின்பேரில், ஆர்.கே நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மதிமுக பகுதி செயலாளர் பாபா ஜெகன் மற்றும் இவரது கள்ளக் காதலி கீதா ஆகியோரை கைது செய்தனர். மேலும், கீதாவின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் 4.5 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், எடை இயந்திரம், கடத்தலுக்கு பயன்படுத்திய டூவிலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், 3 பேர் மீதும் வழக்கு பதிந்து ராயப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த மதிமுக ஆர்கே நகர் பகுதி செயலாளர், மகன் மற்றும் கள்ளக் காதலியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது