காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் (kanchipuram vaikuntha perumal temple ) வைகாசி மாத பிரம்மோற்சவம் விழா ( vaikasi brahmotsavam 2023 ) இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

 

வைகாசி மாத பிரம்மோற்சவம் விழா

 

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும். அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் சோபகிருது ஆண்டு வைகாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.


ஆன்மீகம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா -  ‘கோவிந்தா..கோவிந்தா..’ பக்தர்கள் பரவசம்

 

தங்க கொடிமரத்தில் கருடாழ்வார் 

 

வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றத்தை முன்னிட்டு வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் கொடிமரத்து அருகே எழுந்தருள செய்தனர். பின்னர் கருட ஆழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்து வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளம் முழங்க கோவில் பட்டாச்சாரியார்கள் தங்க கொடிமரத்தில் கருடாழ்வார் கொடியை ஏற்றி வைத்து பிரம்மோற்சவத்தை துவக்கி வைத்தனர்.



 

உலா வந்து பக்தர்களுக்கு காட்சி

 

இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி உடன் வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். வைகாசி மாத பிரம்மோற்சவம் துவங்கியதை ஒட்டி, இன்று முதல் நாள் தோறும் காலை, மாலை என இரு வேளையும்  பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் மே 18-ம் தேதியும்,  திருத்தேர் உற்சவம் மே 22-ம் தேதியும், உற்சவத்தின் நிறைவாக தீர்த்தவாரி உற்சவம் மே 24ஆம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.