சென்னை இரண்டாவது விமான நிலையம் 

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பரந்தூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது. அதற்கென பரந்தூர் உட்பட 12 கிராமங்களில் இருந்து விவசாய விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் கையகப்படுத்தப்படவுள்ளது. மேலும் புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய தினம் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அதனைச் சுற்றியுள்ள நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு, மேட்டு பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளிலும்  விவசாய நிலங்கள்  மற்றும் குடியிருப்பு பகுதிகளை  எடுக்கக் கூடாது என  கிராம சபை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



 

கருத்து கேட்பு கூட்டம்

 

இந்நிலையில்  இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்களிடம் கருத்து கேட்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதற்கென இன்று காலை 10 மணி அளவில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டும், தமிழக அமைச்சர்கள், தாமோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, எ.வ. வேலு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கலந்துக் கொண்டு கருத்து கேட்பார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இக்கூட்டத்தில் பரந்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த 5 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்ததையடுத்து அவர்கள் மட்டுமே பங்கேற்று இருந்தனர்.

 



 

வெளிநடப்பு

 

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு மதியம் 12 மணியை கடந்தும் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வராததாலும், கருத்து கேட்பு கூட்டத்திற்காக கூட்டரங்கில் வைக்கப்பட்ட பேனரும் திடீரென அகற்றப்பட்டு வெளியே எடுத்து சென்றதாலும், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் கொந்தளிப்படைந்து, கூட்டரங்கில் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 நடைபெற்ற கூட்டம்

 

மேலும் அதனைதொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் தொடர்பான பேனரையும் அகற்றி விட்டு, நீண்ட நேரம் காக்க வைத்ததற்கும், விமான நிலையம் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோசங்களை எழுப்பியவாரு கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வெளிநடப்பு செய்து அங்கிருந்து கூட்டமாக கிளம்பிச்சென்றனர். காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் மற்றும் காவல்துறையினர் வெளிநடப்பு செய்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எவ்விர சமரசமும் அடையாத கிராம மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நாங்கள் புறக்கணிப்பதால் அறிவித்து, ஒவ்வொரு கிராமத்திலும் தனி தனியாக நேரடியாக கிராமத்திற்கு வந்து அனைத்து கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்து விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேறி தங்களது கிராமங்களுக்கு சென்று விட்டனர். கருத்து கேட்பு கூட்டத்திற்கு  தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் வராததால்  சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஆவேசமடைந்த கிராம மக்கள் கூட்டாக வெளிநடப்பு செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



 

கலந்து கொண்ட அமைச்சர்கள்

 

இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் தரப்பிலிருந்து, தங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து விமான நிலையம் வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டது. மக்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். என்னைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் கருத்து கேட்ப கூட்டமானது சலசலப்புடன் முடிவடைந்தது.