2026 - 2027 - க்கான நிதிநிலை அறிக்கை வெளியீடு
சென்னை தியாகராய நகரில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ;
திமுக அரசு ஆதிதிராவிடர் மக்களுக்கு துரோகம் செய்ததால் தான் ஆட்சியை இழந்தது. ஆதிதிராவிடர் துறைக்கு ஒதுக்கும் நிதியை வேறு துறை திட்டங்களுக்கு செலவழித்தது திமுக. இது ஆதிதிராவிடர் மக்களுக்கு திமுக செய்த துரோகம்
கடந்த அரசை போல இல்லாமல் தமிழக வெற்றிக் கழக அரசு , ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக இந்த துறைக்கே செலவிட வேண்டும்.
" தமிழ்த் தாய் வாழ்த்து - ஏற்புடையதல்ல "
முதலமைச்சர் விஜயை சந்திக்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும், புரட்சி பாரதம் சார்பில் தயாரிக்கப்பட்ட நிழல் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரை சந்தித்து வழங்க முயற்சி எடுப்போம். அரசு நிகழ்ச்சியில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தான் சரியானது. ஆனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல.
" அனைத்து கட்சி கூட்டம் "
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆள்வதால் , தமிழக காங்கிரஸ் பிரதிநிதிகள் கர்நாடக காங்கிரஸ் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வழங்கவில்லை என்றால் தமிழக அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர்கள் இரண்டு பேரும் ராஜினாமா செய்ய வேண்டும்.
அதிமுக கூட்டணி முடிந்து விட்டது
அதிமுக உடனான கூட்டணி தேர்தலுடன் முடிந்து விட்டது. நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை.
உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ?
அதற்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் அறிவிக்கப்படும் போது கூட்டணி குறித்து நிலைபாடு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
