IPL 2025: சேப்பாக்கத்தில் நடக்கும் 'CSK vs RCB' போட்டியைப் பார்க்க போறீங்களா? இந்த அறிவிப்பை கவனிங்களேன்!
IPL 2025: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பெங்களூர் அணிகளுக்கு லீக் போட்டி வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பெங்களூர் அணிகளுக்கு லீக் போட்டி வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை காண சேப்பாக்கத்திற்கு வருபவர்களுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா 2025
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. சென்னை - மும்பை அணிகள் மோதிய போட்டி நடந்து முடிந்துள்ளது. சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் தொடரின் 8-வது போட்டியில் சென்னை அணி, பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியை நேரில் காண வருபவர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்க்ஸ் - பெங்களூர் அணிக்கு இடையிலான போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 28, 2025 ஆம் தேதி நடைபெற உள்ள “IPL 2025” கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐ.பி.எல். (IPL) போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீடு தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 முறை ரயில் நிலையத்தின் உள்ளே நுழைவு மற்றும் 2 முறை வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். “ என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னை - பெங்களூர் போட்டி - ரயில் நேரம்
அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ இரயில்நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் (நடைமேடை எண் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
சென்னையில், மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 'Peak Hours' 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் முதல் ஆலந்தூர் வரை, கோயம்பேடு, எழும்பூர், ஆலந்தூர் வழித்தடத்தில்ரயில்கள் சேவை இரவு 11.17-க்கு கடைசி ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை - டிக்கெட் சலுகை:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் (+91- 83000 86000 ) மூலமாக டிக்கெட் மற்றும் Paytm App மூலமாகவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.





















