விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் இவர் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளராக வேலை செய்து வருகிறார் இவரது மனைவி பாக்கியலட்சுமி (40) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், மகள் திவ்யா இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் மகன் திவாகரன் (15) கோட்டேரி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.



 

கணவர் பாக்கியராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார் இதனால் பாக்யராஜ் மனைவி பாக்கியலட்சுமி கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவனை அருகில் உள்ள கோவிலுக்குச் அழைத்து சென்று இனி தங்கள் மகளுக்கு திருமணம் ஆகும் வரை குடிக்கக்கூடாது என கோவிலில் தனது தாலியினை கழற்றி வைத்து அதன் மீது சத்தியம் செய்து , பின் அவரது கையில் கயிறு கட்டி அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிக்காமல் ஒழுங்காக இருந்த கணவர் பாக்யராஜ் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவில் திடீரென மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி பாக்கியலட்சுமி அவரிடம் இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டு ஏன் தற்பொழுது குடித்துவிட்டு வந்துள்ளீர்கள் என கணவரிடம் கேட்டுள்ளார் பின் காலையில் அவர்களது மகள் மகன் ஆகிய இருவரையும் தங்களுக்கு சொந்தமான முந்திரிக்காட்டிற்கு ஆடு மேய்க்க அனுப்பியுள்ளார் பாக்கியலட்சுமி பின் சிறிது நேரத்திர்க்கு பிறகு அவரும் முந்திரி காட்டிற்கு சென்றுள்ளார் பின் வெகு நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் முந்திரி தோப்பிற்கு சென்று பார்த்துள்ளனர் அப்பொழுது அங்கே உள்ள முந்திரி மரத்தில் மூன்று பேரும் அருகருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர் பின் இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களது உடலை மீட்டு அவரது வீட்டுக்கு கொண்டு வந்து வைத்துள்ளனர். 

 



 

பின் அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், கடந்த பதினைந்து நாட்களாக இருவருக்குள்ளும் எந்த ஒரு சண்டையும் நிகழவில்லை ஆனால் இவ்வளவு நாட்கள் குடிக்காமல் இருந்தவர் இன்று ஒரு நாள் குடித்துவிட்டு வந்ததால் ஒரு குடும்பமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு மூல காரணம் அருகே உள்ள மதுபானக்கடை தான் அதனால் தான் அங்கு உள்ள பல குடும்பங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெறுகிறது எனவும் அதனை விரைந்து மூட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும் கணவர் பாக்யராஜை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.