அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.



 

இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

 

 ஃபோர்டு தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களுக்கும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்த தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க ஃபோர்டு நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஃபோர்டு நிறுவனம்.

 



 

மறைமலை நகரில் உள்ள  தொழிற்சாலையில், ECOSPORTS, எண்டவர்'. 'ஃபிகோ' மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.  இதுவரை பெற்ற ஆர்டர்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால், வருகின்ற மார்ச் மாதம் வரை  மறைமலைநகர் தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி செய்வதற்கு தாமதமானால் ஏப்ரல் -  மே வரை நீடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கார்கள் வரை தயாரிக்க வேண்டியுள்ளதாக நிர்வாகம் சார்பில் எங்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்காக, நாங்கள் கார்களை தயாரிக்க முன்வந்து தயார் செய்து வருகிறோம். நிறுவனம் கூறியதைப் போல் அனைத்து கார்களும் விரைவில் தயார் செய்து முடித்து விடுவோம். நிறுவனமும் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.



 

 

பேச்சுவார்த்தை தோல்வி

 

தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது.   பேச்சுவார்த்தையில் ஊழியர்கள் தங்களுடைய வேலையை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்குள் தொழிற்சாலை நிர்வாகிகள் அதை ஏற்க மறுத்து, தங்களுடைய செட்டில்மெண்ட் தொகை மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தொழிற்சங்கத்தினர் ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

 

ஃபோர்டு இந்தியா சொத்துக்களை வாங்க முன்வந்த எம்.ஜி

 

ஃபோர்டு  இந்தியா நிறுவனச் சொத்துக்களை வாங்க எம்.ஜி மோட்டார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. எம்.ஜி மோட்டார் நிறுவனம், ஃபோர்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை ஆர்மபக் கட்டத்தில்தான் இருப்பதாகவும், வரும் நாட்களில் உறுதியான தகவல்கள் வெளியாகும் என்றும் அறியப்படுகிறது.