சென்னையில் கஞ்சா , சட்ட விரோத வலி நிவாரண மாத்திரை விற்பனை !! பெண் உட்பட 5 பேர் கைது !! அதிர்ச்சி தகவல்
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் கொருக்குப்பேட்டை கண்ணகி நகர் பின்புறம் கண்காணிப்பு பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்களை விசாரணை செய்து அவர்களை சோதனை செய்தனர்.
விசாரணையில் , அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.அதன் பேரில் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் ( வயது 25 ) , தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சூர்யா ( வயது 25 ) மற்றும் கோபால் ( வயது 32 ) , கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் ( வயது 26 ) , திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சுவேதா ( வயது 21 ) ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 600 எண்ணிக்கைகள் கொண்ட Nitrazepam உடல்வலி நிவாரண மாத்திரைகள், 4 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட அருள்ராஜ் மீது ஏற்கனவே கஞ்சா உட்பட 3 குற்ற வழக்குகளும், கோபால் மீது 1 கஞ்சா வழக்கும், அரவிந்தன் மீது கஞ்சா, திருட்டு, வழிப்பறி உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளதும், இவர் கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெங்களூரில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து , சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது. 40 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் ஐஸ் அவுஸ், ராம்நகர் 8 - வது தெருவிலுள்ள பொதுக் கழிப்பிடம் அருகே கண்காணித்து அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்து அவரை சோதனை செய்தனர்.
அவர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்டவிரோத விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சட்ட விரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த அபிஷேக் ( வயது 21 ) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 40 எண்ணிக்கைகள் கொண்ட Nitrazepam உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அபிஷேக் பெங்களூரிலிருந்து மாத்திரைகளை வாங்கி வந்ததும், இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, போதைப் பொருள், வழிப்பறி உட்பட 6 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட அபிஷேக் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.