தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. கவுன்டன்யா வனப்பகுதியில் இருந்து வரும் மலட்டாறு மற்றும் கவுன்டன்யா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் கலந்து வருகிறது. ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் இருந்து புல்லூர் தடுப்பணையை கடந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் வெள்ள நீர் வந்துகொண்டிருக்கிறது.



 

அதேபோல், அகரம் ஆறு, பாலாற்றின் துணை ஆறுகளில் இருந்தும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் வேலூர் மாவட்ட பாலாற்றில் சுமார் 10 ஆயிரம் கன அடிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலாற்றின் இரு கரைகளை தொட்டபடி வெள்ளநீர் செல்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட 2 கன அடி தண்ணீர் பொன்னை ஆற்றின் வழியாக பாலாற்றில் கலந்து வருகிறது.



 

இந்நிலையில், காவேரிப்பாக்கம் பாலாறு அணைக்கட்டிலிருந்து கூடுதலாக வரும் தண்ணீர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் வர துவங்கியுள்ளது. அவ்வாறு, தண்ணீரை, கால்வாய்களுக்கும், ஏரிகளுக்கும் திருப்பி விடுவது வழக்கம். அந்த வகையில், ஏற்கனவே கோவிந்தவாடி கால்வாய், தூசி, மாமண்டூர் ஏரிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், கம்ப கால்வாய்க்கும், பாலாற்றிலிருந்து தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறு வருடங்களுக்கு பிறகு கம்ப கால்வாயில் நீர் வரத்து வரத்தொடங்கியுள்ளது. 



 

வேலுார் மாவட்டம், வாலாஜா வட்டத்தில், பாலாறு அணைக்கட்டு உள்ளது. இதிலிருந்து துவங்கும் கம்ப கால்வாய், காஞ்சிபுரம் மாவட்டம் தைப்பாக்கம் வழியே, 43 கி.மீ., பயணித்து, ஸ்ரீ பெரும்புதுார் ஏரியில் முடிகிறது. கம்ப வர்மன் என்ற பல்லவ மன்னனால், இந்த கால்வாய் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான், இந்த கால்வாயை, கம்ப கால்வாய் என, அழைக்கின்றனர். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலும் இந்த கால்வாய் துார்வாரி பராமரிக்கப்பட்டுள்ளது.



 

கம்ப கால்வாய் மூலம், பாலாறு நீர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 85 ஏரிகளை நிரப்பி, கடைசியாக ஸ்ரீ பெரும்புதுார் ஏரியில் முடிகிறது. பின், ஸ்ரீ பெரும்புதுார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், சவுத்திரி கால்வாய் வழியே, செம்பரம்பாக்கம் ஏரியை சென்றடைகிறது. இதனால், மன்னர்கள் காலத்திலேயே பாலாற்று நீர், ஸ்ரீபெரும்புதுார் வழியே செம்பரம்பாக்கம் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2015 ஆம் ஆண்டு பெய்த பெருமழையில், இந்த கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய நீர், ஸ்ரீபெரும்புதுார் ஏரி வழியே வெளியேறி, செம்பரம்பாக்கம் ஏரியை சென்றடைந்தது.



 

தற்பொழுது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கம்ப கால்வாயில் நீர் செல்வதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் எரியும் நிரம்ப வாய்ப்புள்ளது.