தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் 400-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. முன்னதாக இந்தப் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நேரடிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. இந்தக் கலந்தாய்வு 2018ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில், முழுமையான அளவில் ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடந்தது.


கடந்த கல்வி ஆண்டில் 1.4 லட்சம் இடங்களுக்கான பொறியியல் கலந்தாய்வு, செப்.27ஆம் தேதி தொடங்கி, அக்.17ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெற்றது. இந்த சூழலில், ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் ஊரகப் பகுதிகளில் ஆன்லைன் மூலம் கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


இதன் காரணமாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் நேரடிக் கலந்தாய்வு மூலம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (17ஆம் தேதி) நடத்தப்படும் என்று அறிவித்தார். இதில் அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும், அதைத்தொடர்ந்து நேரடிக் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.





ஆன்லைன் கலந்தாய்வு எப்படி நடக்கிறது?


முதலில் அண்ணா பல்கலைக்கழகம்தான் பொறியியல் கலந்தாய்வை நடத்தி வந்தது. தற்போது டோட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ( Dote -Directorate Of Technical Education) கலந்தாய்வை நடத்தி வருகிறது. இதில் மாணவர்கள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிட வேண்டும். அதைக்கொண்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதைக்கொண்டு முதல் இரண்டு நாட்கள்  விருப்பத் தேர்வு (Choice filling) பணிக்கு ஒதுக்கப்படும். அதில் மதிப்பெண் அடிப்படையில் தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதையடுத்து மாணவர்களுக்கு உத்தேச இட இதுக்கீடு (Tentative Allotment) வழங்கப்படும். பிறகு கல்லூரி இட ஒதுக்கீடு (Provisional Allotment) அளிக்கப்படும். 


விருப்பத் தேர்வு முறையைப் பயன்படுத்தி ஒரு மாணவர் கல்லூரியைத் தேர்ந்தெடுக்காவிட்டால், தெரிவு செய்த முன்னுரிமை அடிப்படையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககமே கல்லூரியை ஒதுக்கீடு செய்யும்.


இந்த நிலையில் வழக்கமான, ஆஃப்லைன் முறையில் நேரடிக் கலந்தாய்வு நடத்தப்படுவதைத்தான் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. இதுகுறித்து 'ஏபிபி நாடு'விடம் அவர் பேசியதாவது: 


கிராமப்புற மாணவர்களுக்குச் சிக்கல்


''விருப்பத் தேர்வு (Choice filling) முறை என்பது மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப் புறத்தில் வசிப்பவர்களுக்கு, மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. எந்த வரிசையில் கல்லூரியைத் தேர்வு செய்தால், விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர முடியும் என்பது பெரும்பாலான மாணவர்களுக்குக் குழப்பமாகவே உள்ளது. 



கடந்த ஆண்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் முதல்கட்டக் கலந்தாய்வில் திருப்தி இல்லாமல், 2ஆவது கலந்தாய்வுக்குச் சென்றனர். இந்த எண்ணிக்கை நிஜத்தில் இன்னும் அதிகமாக இருக்கலாம். 


ஆன்லைன் கலந்தாய்வில் உள்ள விருப்பத் தேர்வு முறையை சில தனியார் கல்லூரிகள் தவறாகப் பயன்படுத்தி, மாணவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். அவர்களின் சொந்தக் கல்லூரிகளையே முதல் தேர்வாகக் கொடுத்துவிடுவதால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அந்தக் கல்லூரியே ஒதுக்கப்பட்டுவிடுகிறது. அரசுக் கல்லூரிகளில் படிக்கவோ, அடுத்தகட்ட தனியார் கல்லூரிகளில் படிக்கவோ தேவையான மதிப்பெண்கள் இருந்தும், குறிப்பிட்ட தனியார் கல்லூரிகளில் சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர். 


ஆன்லைன் கலந்தாய்வில் சீர்திருத்தம்


இதனால் அரசு நேரடிக் கலந்தாய்வு முறையைக் கொண்டு வரலாம். இல்லாவிட்டால், ஆன்லைன் கலந்தாய்வில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு, ஒரு மாணவருக்குத் தற்காலிக இட ஒதுக்கீட்டில், விரும்பிய கல்லூரி கிடைக்காமல் போகலாம். முறைகேடாக வேறு யாரேனும் விருப்பத் தேர்வு செய்துவிட்டார்கள் என்ற சூழலில், அரசு அந்த மாணவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். மாணவர் நேரடியாகச் சென்று உதவி மையத்துக்குச் சென்று முறையிட்டால், விசாரணைக்குப் பிறகு இறுதிக்கட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும். 


நேரடிக் கலந்தாய்வு முறையை ஆன்லைனில் கொண்டு வர முடியாதா?


நிச்சயமாக முடியாது. ஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களே முயன்று பார்த்து, அந்த யோசனையைக் கைவிட்டு விட்டன. அதேபோல முதல்தரப் பொறியியல் கல்லூரிகளில் திடீரென காலியாகும் இடங்களைப் போக்க, நீட் கலந்தாய்வு முடிந்தபிறகே பொறியியல் கலந்தாய்வைத் தொடங்க வேண்டும். மேலும் வைப்புக் கட்டணமாகச் செலுத்தப்படும் தொகையின் அளவை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் தேவையில்லாமல் பொறியியல் இடங்கள் வீணாகாது.


நேரடிக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுடன் வரும் நபர்கள், பெற்றோர், உடன்பிறந்தோர் என அங்கீகரிக்கப்பட்ட நபர்களாக இருக்க வேண்டும். சில இடங்களில் தனியார் கல்லூரிகள் சார்பில் சிலர் கலந்தாய்வுக்கு வந்து, சம்பந்தப்பட்ட கல்லூரியைத் தேர்ந்தெடுக்கச் செய்கின்றனர். இந்த நிலையையும் தவிர்க்க வேண்டும்''. 


இவ்வாறு ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார். 




தற்போது நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் கலந்தாய்வே சரியானது என்கிறார் பெயர் கூற விரும்பாத உயர் கல்வித்துறை உயர் அதிகாரி. இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ''நேரடிக் கலந்தாய்வில் முன்னணி தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்துவிடும். 


உதாரணத்துக்கு ஒரு கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு 60 இடங்கள் இருக்கும் சூழலில், அரசு ஒதுக்கீட்டும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்படும். இதில் கலந்தாய்வின்போது அரசு ஒதுக்கீட்டு இடங்களைக் குறைவாகக் காண்பிக்க, லஞ்சம் கொடுத்து, காரியத்தைச் சாதித்ததும் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. இதன்மூலம் வசதியான பெற்றோர்களிடம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்லூரிகள் அதிகப் பணத்தை பெற்றுக்கொள்ளும். அமைச்சர்களின் பரிந்துரையில் தகுதிக் குறைவான மாணவர்களுக்கு, தலைசிறந்த அரசுக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கியதும் நடந்திருக்கிறது.


நேரடிக் கலந்தாய்வில் ஊழல்


அதேபோல நேரடிக் கலந்தாய்வு மென்பொருளின் நிர்வாகச் செலவு மிகவும் அதிகம். கலந்தாய்வு மையங்கள் அமைக்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டும். இதில்தான் ஊழல் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 


ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடு ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல இதற்கான மென்பொருள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு விட்டது. அதை ஆண்டுக்கொரு முறை குறைந்த செலவில் அப்டேட் மட்டும் செய்தால் போதும். கலந்தாய்வுக்காக மாணவர்களும் பெற்றோர்களும் அறியாத இடத்தில் அலையத் தேவையில்லை. 


விருப்பத் தெரிவில் முறைகேடா?


மாணவர்கள் விருப்பத் தெரிவைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வைப் பள்ளிகளும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககமும் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், முறைகேட்டுக்கு வாய்ப்பே இல்லை. நேரில் சென்று கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும்போது கூட இதே முறைகேடு நடக்கலாம். 


இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். விருப்பத் தெரிவு முறையில் சிறந்த கல்லூரிகளில் உள்ள இடங்கள் உடனே நிரப்பப்பட்டு விடுகின்றன. இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்டக் கல்லூரிகளில் காலி இடங்கள் நிரம்புவதில்லை. இதில் அரசியல்வாதிகளின் கல்லூரிகளும் உள்ளன. தங்கள் கல்லூரிகளில் இடங்கள் நிரம்ப வேண்டும் என்பதற்காகவும் நேரடிக் கலந்தாய்வு முறையைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்று தெரிவித்தார். 




இதுகுறித்துக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, ''சான்றிதழ் ஸ்கேன் செய்ய வேண்டியதற்கான கட்டணம், இடங்களுக்கு ஏற்ற வகையில் ரூ.200 முதல் ரூ.1000 வரை வசூல் செய்யப்படுகிறது. அதேபோல இந்தியா இன்னும் ஆன்லைன் கலந்தாய்வுக்கும் அதற்கான தொழில்நுட்பத்துக்கும் முழுமையாகத் தயாராகவில்லை. தொழில்நுட்பம் குறித்த புரிதல் அனைவருக்கும் சமமாகச் சென்று சேரவில்லை. 


அரசாங்கத்துக்கு எதிராக யார் பேசுகிறார்கள் என்று கண்காணிப்பதை மட்டுமே உளவுத்துறை பணியாக வைத்திருக்கிறது. உளவுத் துறை அதிகாரிகளைத் தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் செய்யும் முறைகேட்டைக் கண்காணிக்கவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நேரடிக் கலந்தாய்வு மோசடி இல்லாத வகையில் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார். 


இதுகுறித்து விளக்கம் பெறத் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமனை அழைத்தபோது, அவர் அழைப்புகளை ஏற்கவில்லை.


கல்வியாளர்கள் சிலர் கூறும்போது, ''முதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது விருப்பத் தேர்வுகளை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்பதற்கு முன்னதாக, மாணவர்கள் தங்களது விருப்பத் தேர்வுகளை சரியாக முடிவெடுக்க வேண்டும். 


ஒரே பெயரில் உள்ள கல்லூரிகளால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க, கல்லூரி அடையாள எண்ணை கவனமாகக் குறிப்பிட வேண்டும். இடைத் தரகர்களின் தலையீட்டைத் தவிர்க்க இணையதள மையங்களுக்குச் சென்றும், தனியார் கல்லூரிகளுக்குச் சென்றும் விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.