பேச மறுத்த காதலி
கன்னியாகுமரி மாவட்டம் வன்னியூர் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி என்பவரது மகன் அபீஷ் ( வயது 28) என்ற அந்த இளைஞர், ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் முன்னாள் விளவங்கோடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்ததோடு, சொந்தமாக இருசக்கர வாகன வாட்டர் சர்வீஸ் நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
அபீஷ் கடந்த சில காலமாக ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் வெடித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காதலி, கடந்த சில நாட்களாக அபீஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலி தன்னிடம் பேச மறுத்ததால் அபீஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, மிகுந்த கவலையில் இருந்துள்ளார்.
கதவை திறக்காத இளைஞர்
சம்பவத்தன்று மாலையில் தனது தாயாரிடம் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்த அபீஷ், திடீரென தனது அறைக்குள் சென்று கதவை உட்புறமாகப் பூட்டிக் கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த தாயார், ஜன்னல் வழியாகப் பார்த்த போது அபீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அபீஷைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய மனக் கசப்பிற்காகத் துடிப்புள்ள இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
