வரும் கல்வியாண்டிலும் ஆன்லைன் மூலமே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:


''பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தனியார் கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.


நீட் மருத்துவக் கலந்தாய்வுக்குப் பிறகே பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். வரும் கல்வியாண்டிலும் ஆன்லைன் மூலமே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். அரசுப் பள்ளிகளில் விண்ணப்பிப்பதற்கான வசதிகளைச் செய்து தர, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். 


பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான அட்டவணை வெளியிட்டுள்ளது. இங்கு சேர ஜூலை 1ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்தபிறகு மாணவர் சேர்க்கை தொடங்கும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த பாடத்திட்டங்கள் இருக்கும். 


பாடத்திட்டங்கள் அறிமுகம்


முதற்கட்டமாகச் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, கரூர் உள்ளிட்ட 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உயிர் மருத்துவ மின்னணுவியல், தளவாடத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு புதிய துறைகளில் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.




2010ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில், தமிழ் வழியில் பொறியியல் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தோம். ஆக பிராந்திய (தமிழ்) மொழியில் தொழில் படிப்புகள் என்பது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு இருப்பதைத்தான் புதிய கல்விக் கொள்கையில் சொல்லி இருக்கிறார்கள். 


புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள்


புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் இருப்பது உண்மை. இதனால் தமிழ்நாடு கல்விக் கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்படும். இதற்கான குழுவுக்கு ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவசரம், அவசரமாக முடிவெடுக்க முடியாது. வளர்ச்சிகளை உருவாக்கும் வகையில் அவை இருக்கும். பள்ளி, இளங்கலை, முதுகலைப் படிப்புகள் தமிழகத்தில் சரியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. 


எனவே தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அமல்படுத்தவும் வேண்டியதில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நேருக்கு நேராகப் பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டார்.


கலை, அறிவியல் கல்லூரிகளுக்குக்கூட நுழைவுத் தேர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தபிறகு எல்லாம் சரியாகும். க்யூட் முதுகலைத் தேர்வை 22 மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளன''. 


இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண