காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ளது அரசாணி மங்கலம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 9 ஆம் நூற்றாண்டை சார்ந்த மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டா தேவி  சிலை, அய்யனார் சிலை ஆகியவற்றை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ளனர். மேலும் மண்ணில் புதைந்த நிலையில் ஒரு சிலையையும் கண்டெடுத்துள்ளனர்



 

இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில், அரசாணி மங்கலம் கிராமத்தை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் முருகன் என்பவர் அளித்த தகவலின் பேரில் அக்கிராமத்தை கள ஆய்வு செய்தபோது காளியம்மன் கோயில் அருகிலுள்ள வயல்வெளி பகுதிகளில் பல்லவர்களின் இறுதிக்காலத்தை சார்ந்த இச்சிலைகளை கண்டறிந்தோம். முதலாவதாக மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையானது, அக்கிராம கோட்டைமேடு வயல்வெளி பகுதியில் இரண்டரை அடி உயரத்தில் 2 அடி அகலத்தில்  அமர்ந்த நிலையில் அடிப்பாகம் மண்ணில் புதைந்து காணப்படுகிறது இதன் வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட அவரது மகன் மாந்தனும் இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் வீற்றிருக்கிறார்கள்.

 



வலப்பக்கம் அவரின் சின்னமான காக்கை கொடி உள்ளது, மூத்த தேவினுடைய தலையில் கரண்ட மகுடமும் காதில் மகர குண்டலமும் கழுத்தில் சரப்பளி ஆபரணமும் மார்பில் சன்னவீரமும் தோல்களில் வாகுவளையங்களும், கைகளில் வளையல்களும் பருத்த வயிறோடு விரிந்த கால்களும் இடையில் இருந்து பாதம் வரை நீண்ட ஆடையோடு  அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளிக்கிறது. இவரது வலக்கையில் மலரை ஏந்தியும் இடக்கையை தொங்க விட்டபடியும்

 காட்சி தருகிறார்.



 

மூத்த தேவிக்கு தவ்வை, ஜேஷ்டாதேவி என பெயர்கள் உண்டு. இவர் திருமாலின் மனைவியான  லட்சுமி தேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களில் மற்றும் திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர். பல்லவர் காலத்தில்  வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்துள்ளது. இதனால் பல்லவர்கால ஆலயங்களில் வீற்றிருப்பார் சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த, இந்ததெய்வம் வளமையின் அடையாளமாக குழந்தைப்பேறு தருபவளாக செல்வவளம் பெருக்குபவளாக போற்றப்பட்டாள் நாளடைவில் மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போயுள்ளது. இது பல்லவர்களின் இறுதிக்காலத்தை சார்ந்ததாகும்.



 

இரண்டாவதாக காளியம்மன் கோயில் அருகில் உள்ள வயல் வெளிப் பகுதியில் கரும்புத் தோட்டங்களுக்கு இடையில் வேப்ப மரத்தடியில் மூன்றரை அடி உயரத்தில் இரண்டு அடி அகலத்தில் அய்யனார் சிலையை கண்டறிந்தோம். இவரது தலைமுடி ஜடாபார சிகை அலங்காரத்துடன் காதுகளில் பத்ர குண்டலமும் கழுத்தில் அணிகலன்கலாக கண்டிகை  மற்றும் சரப்பளியும் மார்பில் முப்புரி நூலும் தோல்களில் வாகு வளையங்கள் கைகளில் காப்பு ஆகியவற்றுடன் வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடித்து உட்குடிகாசன நிலையில் வலக்கையில் சென்டை ஏந்தியும் இடக்கையை கால் முட்டியின் மீது வைத்து  ஓர் இருக்கையில் அமர்ந்து அழகிய நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார். இவரது இடையில் முடிச்சுகளுடன் கூடிய ஆடை தொடைவரை நீண்டு காணப்படுகிறது. இது 9ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும்‌.



 

மூன்றாவதாக காளியம்மன் கோயில் அருகில் உள்ள ஆலமரத்தடியில் ஒரு பெண் சிலை அழகிய வேலைப்பாடுகளுடன் முகம் மட்டும் தெரிந்த நிலையில் எஞ்சிய பகுதி மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இதை தோண்டி எடுத்து சுத்தம் செய்த பிறகே, இதன் முழு விவரம் அறிய முடியும். அரசாணி மங்கலம் கிராமம் பழமையான கிராமமாகும் இக்கிராமத்தில் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. 

 



 

மேலும் கோட்டைமேடு என்ற பகுதியும் அவ்வூரின் தொன்மையை கூறுகிறது. இப்படி வயல்வெளியில் மண் மேட்டில் புதர் காட்டில் நம் முன்னோர்களின் வரலாற்று சின்னங்கள் மறைந்து அழிந்து கொண்டிருக்கின்றன அவற்றை உரிய கவனம் செலுத்தி மீட்டெடுத்து பாதுகாப்போம், கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமுதாயத்திற்கு  அடையாளமாக பறைசாற்றி கொண்டிருக்கும், இவ்அரிய  கலை பொக்கிஷங்களை காப்பது நம் கடமையாகும் என தெரிவித்தார்.