Thiruvallur Child Abuse: திருவள்ளூரில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Continues below advertisement

3 வயது சிறுமி உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டன் கும்ம்பிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து திமுக, அதிமுக மற்றும் பாமக என பல்வேறு எதிர்க்கட்சிகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகளை அரசு வேடிக்கை பார்கக்கூடாது என சாடியிருந்தனர். இதனிடையே, அந்த குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதகாவும் சில தகவல்கள் வெளியாக காவல்துறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Continues below advertisement

காவல்துறை விளக்கம்:

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என காவல்துறை தெரிவித்துள்ளது.