சென்னை, கொளத்துார், கணேஷ் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த  ஜெயலட்சுமி(வயது 50) என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார்.இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தன் மகன்கள் ராஜேஷ்வர் (வயது30), விக்னேஸ்வர் (வயது 25) ஆகியோருடன் ஜெயலட்சுமி வசித்து வந்துள்ளார்.


இவரது இளைய மகன் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நிலையில், மூத்த மகன் ராஜேஷ்வர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் முன்னதாக செப்டம்பர் 23ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ்வர், தாய் ஜெயலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை கீழே தள்ளி விட்டு, வெளியே சென்று விட்டார்.


இதில் மனமுடைந்த ஜெயலட்சுமி, 44 துாக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு வீட்டிலேயே மயங்கிக் கிடந்துள்ளார். 
மறுநாள் காலை இவர்களது வீட்டின் அருகிலேயே வசிக்கும் ஜெயலட்சுமியின் தந்தை செல்வம், தன் மகளைப் பார்க்க வீட்டுக்குச் சென்றுள்ளார்.


அப்போது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜெயலட்சுமியைக் கண்டு அதிர்ந்து, அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில், நேற்று (செப்.27) காலை 10:30 மணி அளவில் சிகிச்சைப் பலனின்றி ஜெயலட்சுமி உயிரிழந்தார். இது குறித்து ராஜமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 


மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)


அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.