பத்திர எண் ரத்து
சென்னை மாடம்பாக்கம் அடுத்த பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் புகழ்பாலன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2023 ஏப்ரல் மாதம் வழங்கிய மனுவில் குறிப்பிட்ட பத்திர எண் ரத்து செய்ததற்கான காரணம் உள்ளிட்ட நான்கு இனங்களில் தகவல்களை கோரியுள்ளார். இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
அதில் , மனுதாரர் மனுக்களுக்கு அப்போதைய பொது தகவல் அலுவலரும் தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருமான ரஜினிகாந்த் மற்றும் அப்போதைய மேல்முறையீட்டு அலுவலரும், தற்போதைய திண்டுக்கல் மாவட்ட உதவி பதிவுத்துறை தலைவருமான மகேஷ் ஆகியோர், எவ்வித தகவல்களையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, அவர்கள் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான காரண விளக்கத்தை, 15 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அடுத்தக் கட்ட விசாரணையில், மனு தாரர் கூறுகையில் ;
கடந்த 2021 செப்டம்பர் மாதம் மற்றும் 2022 மார்ச் மாதம் அளித்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள், இதுவரை அளிக்கப்படவில்லை என்றார்.
அதற்கு, பொதுத் தகவல் அலுவலர் கூறிய பதிலில், மனுதாரர் கோரிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் மிக்ஜாம் புயலின்போது முழுமையாக காணாமல் போய் விட்டன. அலுவலகத்தில் கோப்புகள் எதுவும் பராமரிப்பில் இல்லை என தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாநில தலைமை ஆணையர் தகவல் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு ;
மனுதாரர் குறிப்பிட்ட , மனு நகல்களை மீண்டும் பொதுத் தகவல் அலுவலரிடம் அளிக்க வேண்டும். அவற்றை பெற்றுக் கொண்ட பின் , சட்டப்படியான நடவடிக்கை எடுத்து அதுகுறித்த அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.
அதே போல், தற்போதைய பொதுத் தகவல் அலுவலர், மேற்சொன்ன அலுவலர்கள் ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோரிடம் , காரண விளக்கத்தைப் பெற்று, அடுத்த மாதம் 6 - ம் தேதிக்குள் ஆணையத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.