வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்குமென கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தண்டையார் பேட்டை, பெரம்பூர் பகுதிகளில் இதுவரை அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள  ’மாண்டஸ்’ புயல் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப்  கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இப்புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு  திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது.


அதிக மழைப்பதிவு


இது  திருகோணமலைக்கு வட-வடகிழக்கே சுமார் 240 கிமீ தொலைவில் (இலங்கை), யாழ்ப்பாணத்திலிருந்து 270 கிமீ கிழக்கு-வடகிழக்கே (இலங்கை), காரைக்காலில் இருந்து 270 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சுமார் 270 கிமீ தெற்கே- சென்னைக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. 


இந்நிலையில், சென்னையில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 7 செ.மீ, பெரம்பூரில் 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னை டிஜிபி அலுவலகம், எம்.ஜி.ஆர் நகர், ஆலந்தூர், அயனாவரம் தாலுகா அலுவலக பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.


இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


மாண்டஸ் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 270 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சுமார் 270 கிமீ தெற்கே- சென்னைக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. 


இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாகை, திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


கரையை கடக்கும்


மேலும் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் என இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மாண்டஸ் புயலானது, மேற்கு-வடமேற்கு திசையை கடந்து, வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே கரையை கடக்க கூடும் என ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மழை எச்சரிக்கை:


09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.