New Year 2023: புத்தாண்டு கொண்டாட்டம்; மெரினா கடற்கரையில் கூடுவதற்கு தடையா..? சென்னை காவல் ஆணையர் விளக்கம்..!
மெரினா கடற்கரையில் கூடுதலாக கடற்கரை பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளிடம் காவல் துறையினர் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் இருக்கும் பவுன்சர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் ஐபிஎஸ், 2023 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழாவை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்பு:
“வரும் 31ஆம் தேதி 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை ஏற்பாடுகள் செய்துள்ளன. மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர்.
மெரினா கடற்கரையில் கூடுதலாக கடற்கரை பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
தீவிர கண்காணிப்பு:
முக்கிய சாலையான காமராஜ் சாலை வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் பார்க் செய்ய அனுமதி இல்லை. நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். பைக் ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகமாகக் கண்காணிக்கப்படும். இதுவரை 360 வண்டிகளை பறிமுதல் முதல் செய்துள்ளோம்.
ஹோட்டல் விடுதியில் நடத்தப்படும் கொண்டாட்டத்தில் அவர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 18 வயது கீழே உள்ள நண்பர்களை அனுமதிக்கக் கூடாது. மாலை ஆறு மணி முதல் இரவு ஒரு மணி வரை அனுமதி அளித்துள்ளோம். எவ்விதமான போதைப்பொருட்கள் வைத்திருந்தாலும் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறை சார்பாக தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை ஏற்படுத்தும் விதமாக தனியார் ஹோட்டல் விடுதிகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு அவர்களிடம் கூறியுள்ளோம். குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.
க்யூ ஆர் கோட் என்னபடும் புதிய செய்முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். போதையில் இருக்கும் நபர்கள் அவர்கள் இடத்துக்கு போவதற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்று இரவு முழுவதும் அனைத்து வாகன சோதனைகளும் செய்யும் இடத்தில் அனைவருக்கும் இந்த க்யூ ஆர் பிரதி கொடுக்கப்படும். மேலும் அனைத்து தனியார் ஹோட்டல் விடுதிகளிலும் ஓட்டப்படும். விழிப்புணர்வுக்காக அனைத்து சமூக வலைத்தளங்களில் மற்றும் வானொலி ஆகியவற்றில் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம்.
கடற்கரையில் கூடுவதற்கு தடையா..?
கடற்கரையில் கூட்டம் போடுவதற்கு தடை இல்லை. ஆனால் கோவிட் கடைபிடித்த கட்டுப்பாட்டுகளை கடைபிடிக்க வேண்டும். சென்னையில் உள்ள அனைத்து பாலங்களும் மூடப்படும். 300க்கும் மேற்பட்ட தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும்.
ஜீரோ ஃபெடாலிட்டி நைட் என்பதுதான் எங்களின் நோக்கம். நல்ல விஷயத்தில் உயிர் இழப்புகள் ஏற்படக்கூடாது. 18 வயதுக்கு உட்பட்டோர் இந்த விதிமீறல்களில் ஏற்பட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை விட சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும் பழிவாங்கும் ரவுடிகள் செயல்பாடுகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது,
சம்பவம் நடந்த அடுத்து 2.42 நிமிடங்களில் காவல் துறை சம்பவ இடத்துக்கு வரும் எனவும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டியிடம் போலீசார் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.





















