தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் முன்னணி மாநிலமாக மாறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

  


முட்டுக்காடு படகு குழாம் - Muthukadu Boat House 


சென்னையை பொருத்தவரை சென்னை கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், சென்னை கிழக்கு சாலையில் இருக்கும் சுற்றுலா தளங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.




அந்தவகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது. முட்டுக்காடு படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் விசை படகுகள், மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் என 30க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் எப்போதும், முட்டுக்காடு படகு இல்லம் சுற்றுலா பயணிகளால் நிறைந்து காணப்படுவது வழக்கமாக உள்ளது.


முட்டுக்காடு மிதவை உணவகம் - muttukadu floating restaurant


முட்டுக்காடு படகை இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) இதுவாகும். இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக பயணக் கப்பல் அமைக்கப்படும். நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட உள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.




முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது. கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. 


எந்தெந்த நேரங்களில் செயல்படும் ?


இந்த உணவகம் மாலை மற்றும் இரவு நேரங்களில் செயல்பட உள்ளது. குழுவாக உணவு அருந்த விரும்புபவர்கள், நண்பர்களுடன் உணவு அருந்த விரும்புபவர்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், லைவ் பேண்ட் (Live Band), இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த உணவகத்தை பயன்படுத்தலாம் ‌ என எதிர்பார்க்கப்படுகிறது. 


பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?


தற்போது கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் முட்டுக்காடு மிதவை உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறை இடம் நாம் தொடர்பு கொண்டு விசாரித்த போது : ஒரு சில அனுமதிக்காக உணவகம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதாகவும், விரைவில் அனுமதிகள் கிடைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 




ஒரு சில அனுமதி காரணமாக தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிதவை உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது, கிழக்கு கடற்கரை சாலையில் மிக முக்கிய உணவகங்களில் ஒன்றாக இது விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.