Koyambedu-Pattabiram Metro: சென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவிற்கு ஒப்புதல்.. 19 ரயில் நிலையங்கள் !
Koyambedu to Pattabiram Metro: "சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது"

சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை 9928 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 22 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது.
சென்னை மெட்ரோ
மாநகரங்களில் மிக முக்கிய போக்குவரத்தாக மெட்ரோ போக்குவரத்து இருந்து வருகிறது. விரைவாகவும் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும், நகரத்திற்குள் பயணிக்க மெட்ரோ மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோவின், தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே சென்னைக்கு புதிய மெட்ரோ வழி தடங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம் - Koyambedu to Pattabiram
அந்த வகையில், சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வெளிவட்டச் சாலை வரை மெட்ரோ அமைப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதற்காக ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
குறிப்பாக சென்னையில் செல்லக்கூடிய மெட்ரோ ரயில் தடத்துடன், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த வழித்தடத்தில் மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
வழித்தடம் எப்படி அமைய உள்ளது ?
கோயம்பேடு - ஆவடி - பட்டாபிராம் வழிதடத்தில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்திய கூறுகள் தயாரிக்கப்பட்டன. கோயம்பேட்டில் தொடங்கி பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி ரயில் நிலையம், திருமுல்லைவாயில், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலை இணைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.
மொத்தம் 22 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த தடத்தில், 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிதியாக 9928 கோடி செலவாகும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அனுமதி
ஏற்கனவே இது குறித்து திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த வழித்தடத்தில் மெட்ரோ அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த மெட்ரோ பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்கள் என்னென்ன ?
இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் மூலம், பட்டாபிராம் வெளிவட்டச் சாலை, இந்து கல்லூரி, கஸ்தூரிபாய் நகர், ஆவடி ரயில் நிலையம், முருகப்பா பாலிடெக்னிக், வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், ஸ்டெட்பௌர்டு மருத்துவமனை, அம்பத்தூர் ஓடி, அம்பத்தூர், டன்லப், டெலிபோன் எக்சேஞ்ச், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், வாவின் முதல் பிரதான சாலை, கோல்டன் பிளாட் சந்திப்பு, பார்க் சாலை, பாடி புதுநகர், கோயம்பேடு உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவுள்ளன.





















