அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நிறுத்தி வைக்கப்பட்ட தனது  ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள்  கூறப்படுவதாகவும், கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு அம்மை, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் வைரஸ் நோய்கள் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுகாதார துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள் வன விலங்குகளிடம் இருந்து பரவி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

மக்கள்தொகை அதிகரிப்பு, நகர்மயமாகுதல், நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல், வன அழிப்பு, மனிதர்களின் சமுக நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாக தான் புதிய நோய்கள் பரவுகிறது என்றும் அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.பருவநிலை மாற்றம், வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் கரணமாகவும், புதிய வகை நோய்கள் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றியவர்களை கண்காணித்து, தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து நீதிபதி, அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை காலாவதியாக விடாமல், தேவையுள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார்.

 

இதுசம்பந்தமாக உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறித்திய நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

மேலும், தான் வழக்கறிஞராக இருந்த போது விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற போது, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்து இல்லை என நர்ஸ் தெரிவித்ததாகவும், பிறகு மருத்துவர் வலியுறுத்திய பின், அந்த மருந்து தனக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதாகவும், அதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினார்.

 

காலாவதி மருந்துகளை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் காலாவதி மருந்து வினியோகம் குறித்து புகார் செய்வதற்கான வசதியையும் உருவாக்கவேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

 

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடைமுறையை வகுப்பது, புகார் செய்வதற்கான  வசதிகள் ஏற்படுத்துவது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



 




தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு - சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதம்.

 


இரட்டை இலை சின்னத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவின் அடிப்படையில் அதிமுக-வுக்கு எதிரான தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. 

 

அதிமுக பொது செயலளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின்  அடுத்த பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும்  தேர்ந்தெடுத்தக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக  பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை  பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை   ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

பொது செயலாளர்  இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா  சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

சசிகலாவின்  இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை  உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என கூறி, அவரது வழக்கை நிராகரித்து.

 

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால், தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். 

 

இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு  இன்று இறுதி விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் சிவில் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை  நிராகரித்தது தவறு என்றும், தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பாகவே முடிவு செய்து உத்தரவிட்டதாகவும் வாதிட்டார். கட்சியின் உரிமை தொடர்பாக சிவில் நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாகவும் வாதிட்டார்.இதைத்தொடர்ந்து  விசாரணையை நவம்பர் 8ஆம் தேதி நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.