குடும்ப பிரச்னை


செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பிரேமலதா. இவர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பிரேமலதாவின் மூத்த மகனின் பிறந்தநாள் விழாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வீட்டில் கொண்டாடினர். அப்போது பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பிரேமலதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரேமலதா மிகவும் மன வேதனையில் இருந்தார்.


என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினர்


இந்நிலையில் நேற்று காலை பிரேமலதா, தனது 4 வயதான இரண்டாவது மகனை அழைத்துகொண்டு ஊரப்பாக்கம் ரயில் நிலையம் வந்தார். பின்னர் அவர், மகனுடன் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கிடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் மகனுடன் நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்த மின்சார ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினர். எனினும் ரயில் மெதுவாக சென்று தண்டவாளத்தில் நின்ற பிரேமலதா மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு ஆம்புலன்சு வர முடியாது என்பதால் பயணிகள் உதவியுடன் காயம் அடைந்த பிரேமலதாவையும், அவரது மகனையும் அதே மின்சார ரெயிலில் ஏற்றி தாம்பரம் வந்தனர்.


தயாராக நின்ற ஆம்புலன்சு


இதற்குள் இதுபற்றி ரயில்வே போலீசுக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சு ஊழியர்கள் பிரேமலதாவையும் அரவது மகனையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் பிறந்த நாள் கொண்டாடியதால் ஏற்பட்ட குடும்ப தகராறில் பிரேமலதா தனது மகனுடன் சேர்ந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. சரியான நேரத்தில் மின்சார ரயிலை டிரைவர் நிறுத்தியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். மின்சார ரயிலை சாதுர்யமாக நிறுத்திய டிரைவரை பொது மக்கள் பாராட்டினர். இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்




Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)