ஆசை வார்த்தை: இதய நோயாளி பெண்ணிடம் பண மோசடி - சென்னையில் டிரைவர் கைது
சென்னை மதுரவாயல் பகுதியில் பெண்ணிடம் சுமார் ரூ.29 லட்சம் மற்றும் 23 கிராம் தங்க நாணயங்களை பெற்று மோசடி செய்த கார் ஓட்டுநர் கைது.

ஆசை வார்த்தை - பணம் பறிப்பு
சென்னை வானகரம் போரூர் கார்டன் பகுதியில் திருநாவுக்கரசு ( வயது 62 ) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ருதி வர்ஷினி என்பவர் இதய நோய் காரணமாக அவரது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தந்தை திருநாவுக்கரசு வீட்டில் வசித்து வந்தார். ஸ்ருதி வர்ஷினி இதய நோய் சிகிச்சைக்காக கடந்த 2022 - ம் ஆண்டு வேலூர் மருத்துவமனைக்கு காரில் சென்ற போது , அறிமுகமான கார் ஓட்டுநர் கார்த்திக் என்பவர் மேற்படி பெண் ஸ்ருதி வர்ஷினியிடம் அனுதாபப்படக் கூடிய வகையில் பேசியும் , ஆசை வார்த்தைகள் கூறியும் பல தவணைகளாக ரொக்கமாகவும் , ஆன்லைன் மூலமாகவும் ரூ.29,58,040/-பணம் மற்றும் 23 கிராம் தங்க நாணங்களை பெற்றுள்ளார்.
வங்கி கணக்கு ஆய்வு
இந்நிலையில் கடந்த 16.05.2025 அன்று ஸ்ருதி வர்ஷினி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். திருநாவுக்கரசு அவரது மகள் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை பார்த்த போது , ஸ்ருதி வர்ஷினியிடம் , கார்த்திக் பணம் மற்றும் தங்க நாணயங்களை பெற்று மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து திருநாவுக்கரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
T-4 மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் , ( வயது 34 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண்
சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , தனிப்படையினர் பெருங்குடி , சர்ச் தெருவில் உள்ள ஒரு ஜுஸ் கடையில் சந்தேகத்திற்கிடமாக சில நபர்களிடம் பெண்களை நிறுத்தி பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை கண்காணித்தபோது , அவர் பெண்களை வைத்து அழைப்பின் பேரில் பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.
அதன் பேரில் , பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் ( வயது 32 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு மேற்படி எதிரியின் கண்காணிப்பில் இருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட எதிரி மாரியம்மாள் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.





















