செம்பரம்பாக்கம் ஏரி 


சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில், பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஏரிக்களில் இருந்து மழை காரணமாக தண்ணீர் வருவது வழக்கம்.


செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்


செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 9.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 22.06 அடியாக உள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.135 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 3.135 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 188 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 188  கன அடியாக உள்ளது (குடிநீருக்காக 104  கனஅடி நீர், சிப்காட் தேவைக்காக 3 கனஅடி நீர், 50 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது, பிற காரணங்களுக்காக 31 கனஅடி நீர் ). தொடர்ந்து அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்  மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


காஞ்சி, செங்கை மாவட்ட ஏரிகள் :


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 30 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 11 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 ஏரிகளில் 4 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 93 ஏரிகளில் 7 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏரிகள் மிக வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உத்திரமேரூர் ஏரியின் நிலவரம் என்ன ?


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக உத்திரமேரூர் ஏரி இருந்து வருகிறது. உத்திரமேரூர் ஏரியின்  மொத்த அடி 20 அடி அதில் 18 புள்ளி 50 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவில் 92.50 சதவீதம் தண்ணீர் எட்டி உள்ளது. உத்திரமேரூர் ஏரி 90% க்கு மேல் நிரம்பியுள்ளதால் கடல் போல் காட்சி அளித்து வருகிறது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரக்கூடிய நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், ” தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 43 சதவீதம் மழை குறைவு. கடந்த 123 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக அக்டோபர் மாதத்தில் மழை குறைவாக பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தை பொறுத்தவரையில் ஒரு மாவட்டத்தில் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிக அளவிலும் ஆறு மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் 16 மாவட்டங்களில் இயல்பு விட குறைவாகவும் 17 மாவட்டங்களில் இயல்பு விட மிகக் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வபோது லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.