சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. கடற்கரை - எழும்பூர் இடையே 4ஆவது ரயில் பாதை பணிகளுக்காக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.


சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்:


சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பறக்கும் ரயில் சேவை தொடக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை முதலில் இயக்கப்பட்டது. பின்னர், வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.


இதில் நாள்தேறும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் முதலில் 6 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு 9 பெட்டிகளுடன் இயங்கி வருகிறது.


சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே இருக்கின்றன.


பறக்கும் ரயில் சேவை:


இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்றொரு பாதையில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 4ஆவது ரயில் பாதை இல்லாததால், கூடுதல் ரயில்களை இயக்க முடியாமல் இருந்து வந்தது.


எனவே, சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இந்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆகையால், 4வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன. 


இந்த நிலையில், ஓராண்டுக்கு பிறகு நாளை முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது.