வளர்ச்சியை நோக்கி சென்னை

 

தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கும் சென்னையில் தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தலைமை அலுவலர்களின் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பிற பகுதிகளை காட்டிலும், சென்னை அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் சென்னையில் குடியேறி, அங்கு இருக்கும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

 

அடுக்குமாடி குடியிருப்புகள்

 

அதிகளவு பொதுமக்கள் சென்னையில் குடியேற துவங்கிய நாளிலிருந்து, அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவை அதிகரித்தது. இன்றைய சூழலில் சென்னையை தாண்டி சென்னையில் புறநகர் பகுதியில் அதீத வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால், சென்னை புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கும், பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பல ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 



 

 அப்பார்ட்மெண்ட் காவலாளிகள்

 

இது போன்ற அப்பார்ட்மெண்ட்களில், பாதுகாப்பு பணியில் ஏராளமான காவலாளிகள் (செக்யூரிட்டி) பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு அப்பார்ட்மெண்டுகளும் முழுமையாக விற்கப்பட்ட பிறகு, அந்த அப்பார்ட்மெண்டுகளில், ஒரு சங்கம் (அசோசியேசன்) உருவாகப்படுகிறது. அதன் மூலமே, அவர்களது தேவையான அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட்களிலும், இதுபோன்ற காவலாளிகளை வேலைக்கு, அமர்த்துவதற்கு பெரும்பாலும், தனியார் ஏஜென்சிகளை அணுகுகின்றனர். குடியிருப்புக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், எவ்வளவு காவலாளிகள் இருக்க வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்படுகிறது. 



 

ஒரு குறிப்பிட்ட ஏஜென்சி ஒரு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில், பாதுகாப்பிற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, ஏஜென்சி சார்பில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு காவலாளிகள் நியமிக்கப்படுகின்றனர். நியமிக்கப்படும் காவலாளிகள் அந்த  குடியிருப்பில் ஷிப்ட் முறையில் பணியாற்றப்படுகிறார்கள். இவ்வாறு அமர்த்தப்படும் காவலாளிகள் 12 மணி நேரம் வரை வேலை பார்ப்பதாகவும், வாரத்தில் ஒரு நாள் கூட விடுமுறை கிடைப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

 

எங்களையும் கவனியுங்கள்

 

இந்த பிரச்சனை குறித்து தமிழ்நாடு செக்யூரிட்டி தொழிலாளர் சங்கம் மாநில செயலாளர் கே. ஆனந்தன் இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், “பல ஆயிரக்கணக்கான செக்யூரிட்டி தொழிலாளர்கள், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் எல்லோருக்கும் அடிப்படை உரிமையானது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சோழிங்கநல்லூர் முதல் பூஞ்சேரி வரை உள்ள இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட அடுக்குமாரி குடியிருப்பு வீடுகள் இருந்து வருகின்றன. இவற்றில் மட்டும் சுமார் 2000 முதல் 5000 செக்யூரிட்டி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கிருக்கும் அசோசியேஷன்கள் ஏஜென்சி இடம் கூறி செக்யூரிட்டிகளை நியமிப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றோம்” என தெரிவிக்கிறார்.



 

"தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்"

 

இது குறித்து மேலும் கூறுகையில், “இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட செக்யூரிட்டி ஏஜென்ஸிகள் இயங்கி வருகிறது. அவ்வாறு இயங்கும் செக்யூரிட்டி ஏஜென்சிகள் முறையாக தங்கள் நிறுவனத்தை புதுப்பிக்கிறார்களா என்பது கூட கேள்விக்குறியாக உள்ளது? இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது போன்ற பகுதிகளில் செக்யூரிட்டியாக பணியாற்றுபவர்களின் வயதானது சராசரியாக 50 ஆகா உள்ளது. குடும்ப சூழல் காரணமாக வயது முதிர்ந்த பின்னும் வேறு வழி என்று இப்பணியில் சேரும் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 12 மணி நேரம் வரை கட்டாயம் வேலை பார்க்க வேண்டிய சூழல் உருவாகிறது. வார விடுமுறையோ, பண்டிகை கால விடுமுறையோ எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. தேர்தல் சமயத்தில் ஜனநாயக கடமை நிறைவேற்ற வாக்களிக்க கூட செல்ல முடியவில்லை, இவ்வளவு சிரமங்கள் மத்தியில்,  வயது முதிர்விலும் வேலை பார்த்தாலும் சம்பளம் என்பது மிக குறைவாகவே வருகிறது. சராசரியாக கீழ்நிலை செக்யூரிட்டியாக பணியாற்றுபவருக்கு 10,000 முதல் 12,000 சம்பளம் மாதம் கிடைப்பதே குதிரை கும்பாக உள்ளது. ஆனால் ஏஜென்ஸிகள் அசோசியேசனிடம், இருந்து ஒரு செக்யூரிட்டிக்கு வாங்கும் தொகையானது இதைவிட அதிகம் தான். பல செக்யூரிட்டி ஏஜென்ஸிகள்,  வங்கிக்கணக்கில் செலுத்தாமல், இன்னும் கைகளில் பணமாக கொடுக்கும் நிறுவனங்களும் இருந்துதான் வருகின்றன” என வேதனையுடன் கூறுகிறார் ஆனந்தன்.

 

 



 

எங்கள் கைக்குத்தான் கிடைக்கவில்லை

 

 “அடுக்குமாடி குடியிருப்பு அசோசியேஷன் சார்பாக ஒரு நபருக்கு கொடுக்கப்படும் தொகை என்னவோ அதிகம் தான், ஆனால் அவை எங்கள் கைக்கு கிடைப்பதில்லை. ஆனால் அவர்கள் சொல்லும் வேலை அனைத்தையும் செய்கிறோம்,  பாதுகாப்பு பணியை தவிர கூடுதல் பொறுப்பும் எங்களுக்கு கொடுக்கப்படுகிறது இருந்தும் வேறு வழி இன்றி செய்து வருகிறோம். இதற்கு அரசு ஒரு தீர்வை கொண்டு வர வேண்டும். முக்கியமாக காவலாளிகள், ஏஜென்சிகள், மற்றும் அசோசியேஷன் ஆகிய மூன்று தரப்பினரிடம் ஒரு பேச்சுவார்த்தையான நடைபெற்று சுமூக தீர்வை கொண்டு வர வேண்டும். இதுவே இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஆனந்தன். 

 

ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும், வசிக்கும் குடும்பத்தினர் இரவில், நிம்மதியாக தூங்குவதற்கு  அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.