சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் நேற்று இந்திய ராணுவத்தில் சேர தேர்வு எழுதிய 28 பேர் புளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தி ஏமாற்ற முயன்றதாகக் கைது செய்யப்பட்டனர். 


நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் குரூப் சி ராணுவ சிவிலியன் தேர்வில் ஏறக்குறைய ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு ஒரு சில தேர்வர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் தேர்வு எழுதியதால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் புளூடூத் ஹெட்போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வில் மோசடி செய்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதையடுத்து, மோசடி செய்த 28 பேரையும் பிடித்து, நந்தம்பாக்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்து, விசாரணையை துவக்கி உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், 28 பேரும் ராணுவத்தில் எந்த பதவிக்கும் விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா..? இப்படி வேறு யாரேனும் தேர்வு எழுதினார்களா..? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 


முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தானில் இதேபோன்று ராஜஸ்தானில் புளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட நுழைவு தேர்வில் மோசடி நடைபெற்றது. 


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் சுமார் 3993 மையங்களில் ரீட் என்ற Rajasthan Eligibility Exam for Teachers நடந்தது. இரண்டு ஷிஃப்ட்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 16.51 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்தத் தேர்வை ஒட்டி தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பிகானர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்தத் தேர்வில் நூதன மோசடி நடந்துள்ளது. பிகானர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 5 பேர் ப்ளூடூத் சாதனம் பொருத்திய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செருப்பை அணிந்து மோசடியில் ஈடுபட முயன்றது அம்பலமானது.


ரூ.6 லட்சம் விலை:


ஒரு செருப்பின் விலை ரூ.6 லட்சம். இதுபோன்று 25 நபர்களுக்கு இந்த ப்ளூடூத் செருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த செருப்பை அணிந்து வந்தவர்கள் தேர்வுக்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். கங்காசாஹர் காவல்துறையினருக்கு முன் கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது செருப்பும் மற்ற சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் செருப்பை விற்பனை செய்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ப்ளூடூத் செருப்பு எப்படி இயங்கும்?


ரூ.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் ப்ளூடூத் செருப்பில் பிரத்யேகமாக ஒரு காலிங் டிவைஸ் இருக்கும். அதிலிருந்து குறிப்பிட்ட ஒரு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அந்த எண்ணில் மறுமுனையில் பேசும் நபருக்கு ஏற்கெனவே கேள்வித்தாள் சென்றிருக்கும். அவர் அங்கிருந்து கேள்வி 1க்கு A, 2க்கு D  என்றெல்லாம் ப்ராம்ப்ட் பண்ணுவார். அது தேர்வு எழுதும் நபரின் காதுக்குள் இருக்கும் சிறிய ப்ளூடூத் டிவைஸ் மூலம் அவர் காதில் கேட்கும். இந்த சாதனத்தை யாரும் பார்க்கமுடியாது. அவ்வளவு சிறிய சாதனம்.  வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் தேர்வு எழுதும் காட்சி நம் கண் முன்னே வந்து செல்கிறது அல்லவா? தொழில்நுட்ப வளர்ச்சிகள் நன்மைக்காகவேத்தானே தவிர, இது போன்ற தவறுகளுக்காக அல்ல.