சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் முக்கிய குடிநீர் ஆதாரமாக, செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக முறையாக பருவமழை பெய்து வரும் காரணத்தினால் செம்பரபாக்கம் ஏரி கோடை காலத்திலும் வற்றாமல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா நதியில் இருந்து வெளியேறிய நீர் செம்பரம்பாக்கம் ஏரியில்  கலந்ததால் செம்பரம்பாக்கம் ஏரி கோடை காலத்திலும் கடல் போல் காட்சி அளித்து வந்தது.

 



 

நேற்று நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் நீர் வளத்திற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் பிறை ஏரிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 24 அடியில் 23.3 அடியை எட்டியது. நேற்று நள்ளிரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு ஏரிகளில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரானது 1,700 கன அடியாக அதிகரித்தது . ஏரியின் மொத்த கொள்ளளவான 3745 மில்லியன் கன அடியில் 3 ஆயிரத்து 475 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து இதே அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருந்தால் காலை 10 மணிஅளவில் 500 கனஅடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.



நேற்று நள்ளிரவு ஒரே நாளில் 5 மணி நேரம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பானது பாதுகாப்பான அளவில் இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேவை இருக்கும் பட்சத்தில் நீர் குறைந்த அளவு வெளியேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் மழை

 

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று காலை ஓரளவு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், நேற்று இரவு சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளிலும் கருமேகம் சூழ்ந்தது. பலத்த காற்று வீசியது. சரியாக பத்து முப்பது மணி அளவில் துவங்கிய மழை, விடிய விடிய கொட்டித் தீர்த்தது. கோடை மழை என்பதால் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

 

இதையடுத்து,  சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி. கொளத்தூர், கொரட்டூர். வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, ஆலந்தூர் என பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. நீண்ட நாட்களாக வெயிலில் வாடி வந்த சென்னை மக்களுக்கு இந்த மழை இதமாக அமைந்துள்ளது. அதேசமயம், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோர் சற்று சிரமத்திற்கு ஆளானார்கள்.இதேபோல சென்னையின் புறநகர்ப் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. தாம்பரம் முதல் முதல் அரை மணி வரை பெய்த கனமழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கவும் செய்தது.