சென்னைவாசிகளுக்கு தொங்கும் வயர்களை கண்டு அச்சமா... இனி கவலை வேண்டாம்...


சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக, தாழ்வாக தொங்கும் ஒயர்களை சீர் செய்ய மாநகராட்சி தொடங்கி உள்ளது.


சென்னை  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு மேல் தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த வயர்களால் மக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. நடந்து செல்லும் பாதையில் தாழ்வாக தொங்கும் வயர்களால் குழந்தைகள் விளையாடும்போது விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தெருக்களில் செல்லும் வாகனங்கள்  விபத்துக்குள்ளாகுகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால்  மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மக்கள் தாங்களாகவே சென்று அந்த மின்பெட்டியிலிருந்து வயர் மூலம் தங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து ஆபத்தான முறையில் பயன்படுத்துகின்றனர். மழைக்காலங்களில் காற்றடிக்கும் போதெல்லாம் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்படுகிறது. வலுவிழந்துள்ள நிலையில் உள்ள மின்கம்பிகள் எப்போது அறுந்து விழுமோ என்ற பயந்தபடி மக்கள் செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற விபத்துகள் மடிப்பாக்கம், புளியந்தோப்பு, கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் விபத்துகள் நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் வீடுகளுக்கு மேல் மற்றும் தெருக்களில் தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த ஒயர்கள் மற்றும் பயன்படுத்தப்படாத கேபிள் ஒயர்களை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கி மூன்று வாரங்கள் கடந்துவிட்டன.
இந்த 3 வாரங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி 100 கி.மீட்டருக்கும்  கேபிள் ஒயர்களை அகற்றியுள்ளது. மேலும் விடுப்பட்ட பகுதிகளில் தொங்கும் வயர்கள் குறித்து தெரு பெயர் மற்றும் அதன் புகைப்படத்துடன் பொதுமக்கள் மாநகராட்சி எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்மூலம் விடப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளால் சீர் செய்யப்படும். 


மேலும் தொங்கும்  வயர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வருடாந்தர இலக்கை பெருநகர சென்னை மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ளது.


கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறாத நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி தொங்கும் ஒயர்களை அகற்றும் பணிகளை தொடங்கியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் விபத்துகள் தவிர்க்கப்படவும் வாய்ப்புள்ளது.