வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், 5ம் தேதி வள்ளலார் - 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சென்னையில் முதல் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் அன்னதானம் நடைபெறும் நாள் மற்றும் இடங்களின் பட்டியல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,

 

6.10.2022 முதல் 8.10.2022 வரை - வசந்த மண்டப அறக்கட்டளை,(கந்தக்கோட்டம், முத்துக்குமாரசுவாமி கோயில் அருகில்)

 

9.10.2022 முதல் 11.10.2022 வரை - மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில்

 

12.10.2022 முதல் 14.10.2022 வரை - ஜார்ஜ் டவுன், வாசவி மஹால்

 

15.10.2022 முதல் 17.10.2022 வரை - கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோயில்

 

18.10.2022 முதல் 20.10.2022 வரை - திருவொற்றியூர், பட்டினத்தார் கோயில் மண்டபம்,

 

21.10.2022 முதல் 23.10.2022 வரை - சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோயில்

 

24.10.2022 முதல் 26.10.2022 வரை - சூளை, சீனிவாச பெருமாள் கோயில் மண்டபம்

 

27.10.2022 முதல் 29.10.2022 வரை - கே.கே. நகர், சக்தி விநாயகர் திருக்கோயில்

 

30.10.2022 முதல் 1.11.2022 வரை - கொரட்டூர் ,சீயாத்தம்மன் திருக்கோயில் மண்டபம்

 

2.11.2022 முதல் 4.11.2022 வரை - கோட்டூர்புரம், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் திருமண மண்டபம்

 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



 


திருவள்ளுவர் ஆன்மிகத்தை பற்றி தன் திருக்குறள்களில் நிறைய பேசியுள்ளார் - ஆளுநர் ரவி பேச்சு

 

 திருக்குறளில் ஆன்மிகத்தை பற்றி திருவள்ளுவர்  நிறைய பேசியுள்ளார் என தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

 

குறள் சங்கம் சார்பில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 'திருக்குறள் உலகத்தின் முதல் நூல்' வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கவனர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். 

 

நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

 

கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளையும் படித்து அதன்  முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சித்து  வருகிறேன். 12-க்கும் மேற்பட்ட மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் என்னிடம் இருக்கிறது. அவற்றை வைத்து நான் படித்து வருகிறேன். திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும், பெரிய அர்த்தங்கள் அமைந்துள்ளது. ஒவ்வொரு முறை நான் அந்த புத்தகத்தை திறந்து படிக்கும்போது, அதில் உள்ள அர்த்தங்களையும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கண்டு வியக்கிறேன். உலகத்திற்கு தேவையான வரிகளை 1½ வரிகளில் அடக்கிய திருவள்ளுவர், ஒரு மாபெரும் மேதை. திருக்குறளால் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை.

ஆன்மிகம் பற்றி பேசியிருக்கிறார் திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன். 

 

நிறைய கற்று தேர்ந்தவர்கள் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார்கள். அவற்றை படிக்கும்போது என்னால் அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிகிறது.  திருக்குறளை படிக்கும் போது இது தர்மசாஸ்திரமும், நீதி சாஸ்திரமும் கலந்த கலவையாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். எதிர்பாராத விதமாக திருக்குறள் என்பது மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் நெறிமுறைகளை மட்டுமே கொண்ட நூல் என கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பேசி வருகிறோம். ஆனால் திருவள்ளுவர் ஆன்மிகத்தை பற்றி தன் திருக்குறள்களில் நிறைய பேசியுள்ளார். அதைப்பற்றி நாம் பேச வெட்கப்படுகிறோம். முதன் முதலில் திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்த ஜி.யு.போப் பற்றி நான் பேசும்போது சிலர் எதிர்த்து சத்தமிடுவார்கள். சத்தம் ஒருபோதும் உண்மையை அழித்துவிட முடியாது. ஜி.யு.போப் தமிழை கற்றுக்கொண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தபோது அதிலிருந்த ஆன்மிகத்தை கீழே தள்ளிவிட்டார். மீட்டெடுக்க வேண்டும். திருக்குறளில் முதல் குரலில் வரும் ஆதிபகவன் என்ற வார்த்தையை அவர் ஆங்கிலத்தில் கடவுள் என்று மொழிபெயர்க்காமல் முதன்மை தெய்வம்(பிரைமல் டயட்டி) என்று மொழிபெயர்த்துள்ளார். நாம் எல்லோரும் கடவுளை மதிக்கிறவர்கள் கடவுளை போற்றுகிறவர்கள். ஆதிபகவன் அனைத்து இந்திய மொழிகளிலும் காணப்படுகிறது. இது இந்திய ஆன்மிகத்தின் மையத்தில் உள்ளது. அவர் ஏன் கடவுள் என்று அதை மொழிபெயர்க்கவில்லை. இது நியாயமானது அல்ல.

திருக்குறள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. திருவள்ளுவருக்கு நாம் சிலைகளை வைக்கிறோம். அவர் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறார். திருக்குறள் ஆகச்சிறந்த படைப்பு, ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கொண்ட புத்தகம். திருக்குறள் ஒரு பகுதி மக்களுக்கான நூல் இல்லை அது உலகத்துக்கான நூல். அது இந்தியாவின் அடையாளம். திருக்குறளை முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும். இதில் ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.