CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
CM Vijay Visit Perambur: சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக தான் போடிட்யிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் விஜய் இன்று வருகை தர உள்ளார்.

CM Vijay Visit Perambur: பெரம்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்க உள்ளார்.
பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய்:
சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றார். தொடர்ந்து தனது திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்ததோடு, அங்கு சென்று வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதேநேரம், இரண்டு மாதங்கள் கழித்தும் பெரம்பூர் செல்லாமல் இருந்தார். இதற்கு சட்டமன்ற உறுப்பினருக்கான அலுவலகத்தின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததோடு, புதியதாக ஆட்சிக்கு வந்தவர்கள் என்பதால் பல்வேறு நிர்வாக பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக தனது பெரம்பூர் தொகுதிக்கு விஜய் பயணம் மேற்கொள்கிறார்.
CM விஜயின் நவீன MLA அலுவலகம்
பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமானது சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் அமைந்துள்ளது. ஏற்கனவே அமைந்திருந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முகப்பில் "பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச. ஜோசப் விஜய்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தைச் சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய்க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தினுள் தனியாக கணினிகள் உள்ளன. 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அலுவலக திறப்பும்.. செயலி சேவையும்..
பெரம்பூரில் உள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பிற்பகல் 3 மணியளவில் முதலமைச்சர் விஜய் திறந்துவைக்க உள்ளார். அதன் பிறகு அருகில் உள்ள ரேஷன் கடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய் உள்ளார். பல்வேறு பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்ட்கள் மற்றும் பட்டாக்களை வழங்கவுள்ளார். அதோடு, தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான பிரத்யேக செயலி ஒன்றையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளார். அதன் வாயிலாக பெரம்பூர் மக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முதலமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு 'மக்கள் சேவை தளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அடிப்படை தேவைகள்.. உடனடி நடவடிக்கை..
செயலி மூலமாக புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதை ஏற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி மனுதாரரின் செல்போன் எண்ணுக்கு கிடைக்கும். புகார்கள் மீது குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், மின்சாரம்,சாலை வசதி, துப்புரவுப் பணிகள் போன்ற அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்பட்டு, அது குறித்த விரிவான பதிலை மக்களுக்கு செயலி வழியாகவே தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டது முதல், பிரச்சினைகள் தீர்க்கப்படுவது வரை தங்களது மனுக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் தொகுதி மக்கள் செயலி மூலமாகவே அறிந்துகொள்ளலாம்.
இந்தச் செயலி மூலம் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம்,சாலை வசதி, குடிநீர், துப்புரவுப் பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், அரசு நலத்திட்டங்கள், வீட்டு வசதி உதவிகள், வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் சட்டரீதியான ஆவண உதவிகள், அவசர உதவிகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நேரடியாக முதலமைச்சர் விஜய்யின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியும். பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இச்செயலியைப் பிரத்யேகமாகக் கண்காணிப்பதற்கான நவீன கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















