சென்னை காவல்துறை நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலைமறைவு குற்றவாளிகள் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சென்னையில் குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பின்னர், முறையாக ஆஜராகாமல் இருந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், குற்றவாளிகளை பிடிக்க 12 துணை காவல் ஆணையரகள் மேற்பார்வையில் உதவி காவல் ஆணையர்கள் தலைமையில், தலைமை காவல ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டன.  




இந்த தனிப்படை நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், தலைமறைவு குற்றவாளிகள் 55 பேர் கைது செய்யப்பட்டனர் காவல்துறையினர் தேடுவதையறிந்த 115 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் 41 பேரின் ஜாமீனை ரத்து செய்யும் படி  நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 7 பேரின்  ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


இந்த நடவடிக்கை தொடரும் என்று சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள்  மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  சென்னை காவல்துறை சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கடந்த ஒரு வாரத்தில்  7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.