இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், மீனவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு 

 

தமிழ்நாட்டின் நாகைப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த, 10 மீனவர்கள், இயந்திரப் படகில்  இந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி அதிகாலையில், கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்து, தமிழக மீனவர்கள் பத்து பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு சுமத்தி, அவர்கள் பிடித்து வைத்த மீன்கள், வலைகள் மற்றும் இயந்திர படகு ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்பு தமிழக மீனவர்கள் பத்து பேரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

தமிழக முதலமைச்சர் கோரிக்கை

 

இந்த நிலையில் நாகை பட்டினம் மீனவர்களின் குடும்பத்தினர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி, தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக, இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

 

ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி விடுதலை

 

இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி, இலங்கை நீதிமன்றம், தமிழ்நாட்டின் நாகைபட்டினம் மீனவர்கள் 10 பேரையும், சிறையிலிருந்து விடுவித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

இந்திய தூதரகத்தின் ஒப்படை

 

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களை, தங்களுடைய பராமரிப்பில் வைத்துக்கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தினர். அதோடு மீனவர்களை தமிழ்நாட்டுக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் மீனவர்கள் பத்து பேருக்கும், பாஸ்போர்ட் விசா இல்லாததால், அனைவருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர். அதோடு மீனவர்களுக்கு விமான டிக்கெட் ஏற்பாடுகளையும், இந்திய தூதரகம் செய்தது.

 

தமிழ்நாடு வந்தடைந்த மீனவர்கள்

 

இந்த நிலையில் இன்று காலை இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து, சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 10 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்றனர். அதோடு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனத்தில், பத்து மீனவர்களும் ஏற்றப்பட்டு, அவர்களின் சொந்த ஊரான நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.