சென்னை விமான நிலையத்தில் சூடான் நாட்டை சேர்ந்த  பயணி ஒருவரிடம் இருந்து ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள 1.85 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது


தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையமாக கருதப்படுவது சென்னை விமான நிலையம். உள்ளூர் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் கடந்த வியாழக்கிழமை  சார்ஜாவில் இருந்து வரும் சூடான் நாட்டை சேர்ந்த  பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த நபரை அடையாளம் கண்ட விமான நிலைய சுங்கத்துறைனர் சோதனை செய்தனர் . அப்போது அந்த நபரிடம் நூதன முறையில் பசை வடிவிலான தங்கமும், தங்கக் கட்டியும் இருப்பது தெரியவந்தது. தங்கத்தை கடத்தி வந்த அந்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து 1.85 கிலோ கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு  ரூ.82.41 லட்சம் என  சென்னை சர்வதேச  விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதே போல கடந்த வாரம் திருச்சி விமான நிலையத்திலும்  தங்கம் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.  கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேவகி என்ற பயணியிடம் நடத்திய சோதனையில், அவர் தனது உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான 318 கிராம் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.  அதே நாளில் விழுப்புரத்தை சேர்ந்த கணேசன் என்ற பயணி தனது உடலில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.32 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான 631 கிராம் தங்கக்கட்டியை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து இயல்பாக தங்கம்  கடத்தல் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு சில பயணிகளிடமிருந்து கோடிக்கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் என்ன நடக்கிறது? பாதுகாப்புகள் குறைபாடா? கடத்துவதற்கு அதிகாரிகள் துணையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக  இந்த மாத தொடக்கத்தில் மட்டும்  சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 


 


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண