3 மாதத்தில் இடிந்த கட்டிடம்.. செங்கல்பட்டு அரசு பள்ளியில் நடந்த அதிர்ச்சி.. சிக்கிய மாணவர்கள்
மதுராந்தகம் அரசுப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டதில் 5 மாணவர்கள் காயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு மூன்று மாதத்தில், மேற்கூரை இடிந்து விழுந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் பள்ளிக் கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுமான தரம் குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.
வகுப்பறையில் மாணவர்கள் இருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த எதிர்பாராத விபத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்களும் உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திறக்கப்பட்ட மூன்று மாதத்தில் அதிர்ச்சி
இந்த விபத்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்தப் பள்ளிக் கட்டிடம் கடந்த ஏப்ரல் 4, 2025 அன்றுதான் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதாவது, கட்டிடம் திறக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள்ளாகவே மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது கட்டுமானப் பணியின் தரம் குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
மதுராந்தகம் போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திறக்கப்பட்ட மூன்று மாதங்களிலே இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக மாணவர்களுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தரமற்ற கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிக் கட்டிடங்களையும் உடனடியாக ஆய்வு செய்து, அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விபத்து, இனி வரும் காலங்களில் பள்ளிக் கட்டிட கட்டுமானப் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.






















