Breaking LIVE: திருப்பதி கோயிலில் இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் 2 நாட்களுக்கு ரத்து..!

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

உமா பார்கவி Last Updated: 31 Dec 2022 06:10 PM
370 மரங்கள் வெட்டிக் கடத்தல்..!

ஊட்டியில், 370 யூகலிப்ட்ஸ் மரங்களை 4 நாட்களாக வெட்டியதில் வனசரகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

16வது போப் காலமானார்..!

16வது போப்பாக இருந்த பெனெடிக்ட் தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். 

திருப்பதி கோயிலில் இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் 2 நாட்களுக்கு ரத்து..!

இன்றும், நாளையும் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை - கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

நாளை புத்தாண்டு பண்டிகையொட்டி கடலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பு மாவட்ட முழுவதும் 1600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்ட நிலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷன் தகவல்.

தமிழகத்தில் மேலும் 3 கோவில்களில் முழுநேர அன்னதான திட்டம்- முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோயில்களில் முழுநேர அன்னதான திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கபட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.


 

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. டிடிவி தினகரன் நேரில் ஆதரவு..!

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 

ரேங்கிங் பேட்மிண்டன் - தமிழக வீரர் சாம்பியன்..!

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ரேங்கிங் பேட்மிண்டனில் தமிழக வீரர் ரித்விக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

Breaking Live : சீனாவிற்கு பயணத்தை தவிர்க்க பிரான்ஸ் அறிவுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தலால் சீனாவிற்கு பயணம் செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பிரான்ஸ் செல்பவர்கள் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking Live : நாமக்கல் - பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பட்டாசு கடை உரிமையாளர் வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Breaking Live : எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை

கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்ட எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.  பணி காலம் நேற்றுடன் நிறைவடைந்த  நிலையில், எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Breaking Live : மதுரை சிறையில் தீவிர சோதனை

மதுரை மத்திய சிறையில் 3 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கைதிகளிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று சிறையில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது.

Background

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கண்டறிய ஏ.டி.எஸ்.பி. ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார். 


அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின்,  வேங்கை வயல் தெருவில் ஏராளமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி தவித்து வந்த அந்த மக்கள் முன்னெடுத்த  நீண்டகால,  போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016-17ஆம் ஆண்டில் வேங்கை வயல் பகுதியில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தான், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.


குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம்:


இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில் சிறுவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில், நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.


திட்டமிட்டு சதிச்செயல்?


அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.


கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என புகார்:


இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கை வயல் பகுதிக்கு வந்தனர். அப்போது, குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக ஊராட்சி தலைவர் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டியிலன மக்களிடம் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, பேசிய பட்டியிலன மக்கள் அங்குள்ள அய்யனார் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்படுவதிவில்லை என புகாரளித்துள்ளனர். இதுதொடர்பாக, ஊர்மக்களிடம் விசாரித்தபோது சாதிய பாகுபாடு எதுவும் நாங்கள் காட்டுவதில்லை எனவும், பட்டியிலன மக்கள் தான் கோயிலுக்குள் வருவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் அதிரடி:


இதையடுத்து கோயிலின் சாவியை கேட்டு பெற்ற மாவட்ட ஆட்சியர், பட்டியிலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார். இதுதொடர்பாக பேசிய பட்டியலின பெண், கடந்த 3 தலைமுறைகளாக வேங்கை வயல் கிராமத்தில் நாங்கள் வசித்து வருவதாகவும், ஆனால் இப்போது தான் முதல்முறையாக இந்த கோயிலுக்குள் வந்து இருப்பதாகவும் கூறினார். எந்த விதத்தில் எங்களை தாழ்த்தப்பட்டவர்களாக அவர்கள் கருதுகின்றனர் என புரியவில்லை. நாங்களும் படித்து சமூகத்தில் முன்னேற தொடங்கிவிட்டோம் என வேதனையுடன் தெரிவித்தார்.


இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அவை தொடர்பாகவும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். 


11 பேர் கொண்ட குழு


இறையூர் கிராமத்தின்,  வேங்கை வயல் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில்  மலம் கலந்த குற்றவாளிகளை கண்டறிய ஏ.டி.எஸ்.பி. ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.