இந்திய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரின் பெயரே பார்டர்-கவாஸ்கர் கோப்பை. கடந்த 75 ஆண்டுகளாக, இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தாலும், கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்துதான் இரு நாடுகள் மோதி கொள்ளும் டெஸ்ட் தொடருக்கு பார்டர்-கவாஸ்கர் டிராபி என பெயர் வைக்கப்பட்டது.


கடந்த முறை, பார்டர் - கவாஸ்கர் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. 


வெற்றிகளுக்கு காரணமான ஜடேஜா:


தொடரில் இரண்டு வெற்றிகளுடன் இந்தியா முன்னிலை வகித்து வரும் நிலையில், நான்காவது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி முயற்சித்து வருகிறது. ஆனால், தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலியா கடுமையாக முயன்று வருகிறது.


இதில், இந்தியாவின் இரண்டு வெற்றிக்கும் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஜடேஜா. தொடரின் முதல் போட்டி, மகாராஷ்டிரா நாக்பூரில் நடைபெற்றது. அதில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்த வெற்றிக்கு தூணாக இருந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 


சொல்லி அடிக்கும் ஜடேஜா:


டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் ஜடேஜா அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. அதில், இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.


மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும், அந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தையே ஜடேஜா வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.


இருப்பினும், முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைத்தார் ஜடேஜா.


தற்போது, தொடரின் நான்காவது போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று, 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. அதில், முக்கியத்துவம் வாய்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றி இருந்தார்.


லபுசானே 4 முறை...ஸ்மித் 3 முறை:


இந்த தொடர் முழுவதுமே, ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், லபுசானே ஆகியோரின் விக்கெட்டை அதிக முறை எடுத்தவர் ஜடேஜாதான். நடப்பு தொடரில், லபுசானேவின் விக்கெட்டை 4 முறையும் ஸ்மித்தின் விக்கெட்டை மூன்று முறையும் எடுத்துள்ளார் ஜடேஜா.


பந்து வீச்சில் மட்டும் இன்றி, பேட்டிங்கிலும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் ஜடேஜா. குறிப்பாக, தேவைப்படும் நேரத்தில் வந்து இந்தியாவுக்கு தேவையான ரன்களை சேர்ப்பதில் ஜடேஜா முக்கிய பங்கி வகிக்கிறார்.


 






எனவே, தொடரின் கடைசி போட்டியிலும், ஜடேஜா சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலிய அணியை திணறிப்பாரா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.