சென்னை பஸ் ஏறும் ஐஸ்வர்யா ராஜேஷின் படுக்கை அருகே, ஆண் ஒருவர் இருக்கிறார். புக்கிங் பிரச்னையால் ஏற்பட்ட அந்த சந்திப்பு, ஒரு நாள் இரவு முழுக்க தொடர்கிறது. ஒரே இரவில் முன்பின் தெரியாத அந்த இருவரும் காதலிக்கின்றனர். மறுநாள் பார்த்தால் யூனிபார்ம் உடன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வருகிறார் ஐஸ்வர்யா. அதே ஸ்டேஷனில் ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டு வருகிறார் இரவு காதலன். பிரிந்ததாக நினைத்த இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இதற்கிடையில் ஐஸ்வர்யாவுக்கு ஒரு போன். அதிர்ந்து போய் ஓடுகிறார். சென்னையில் திருமணமாகி குடியேறியிருந்த தனது பாலிய சினேகிதி மாயமானதாக அவரது கணவர் தகவல் அளிக்க ,அவர்கள் இருவருக்குமான நெருக்கங்களை நினைவு கூர்ந்தபடி அங்கு செல்கிறார் ஐஸ்வர்யா. 


சூர்யா என்கிற அந்த பெண் கதாபாத்திரம் மாயமானது குறித்து விசாரணையை துவக்கிறார். இரு சிசிடிவி ஆதாரங்கள் மட்டுமே கிடைக்கும் நிலையில், அதை வைத்து புலன்விசாரணை நடத்துகிறார். மாற்றுத்திறனாளி ஒருவர், தோழியின் கணவர் என சந்தேக வட்டாரம் விரிந்து கொண்டே செல்கிறது. இதற்கிடையில் மாயமான தோழி, காரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறார். கார் வேகமாக ஓடி விபத்தானதாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. ஆனாலும் ஐஸ்வர்யாவிற்கு சந்தேகம். கொலை என்கிற ரீதியில் விசாரணையை நீட்டுகிறார். முழுக்க அதற்காக மட்டுமே மெனக்கெடும் அவரை அவ்வப்போது அவரது காதலன் சந்தித்து தேற்றுகிறார். 


ஒரு கட்டத்தில் காரியில் இறந்த பெண், தனது தோழி இல்லை என்றும், அதற்கு காரணம் தோழியின் கணவன் என்றும் ஐஸ்வர்யாவிற்கு தெரியவருகிறது. அவரை கைது செய்ய வரும் போது, தோழியின் கணவர் கூறும் காரணத்தை கேட்டு ஷாக் ஆகிறார் ஐஸ்வர்யா. தனது மனைவிக்கு காதலன் இருந்ததாகவும், அவருடன் செல்ல அவள் விரும்பியதால், இது போன்று திட்டமிட்டு அவள் இறந்ததாக நாடகமாடி, அவளை அவளது காதலனுடன் சேர்த்து வைத்ததாக கூறி, அதற்கான ஆதாரத்தையும் காட்டுகிறார். 




முழுமனதுடன் இல்லை என்றாலும், ஆதாரங்களின் அடிப்படையில் அந்த வார்த்தைகளை நம்பும் ஐஸ்வர்யா, ஒருமுறையாவது தன்னிடம் தோழி பேசினால் தான் நம்புவேன் என்கிறார். 3 மாதங்களுக்கு ஒரு முறை அவர் பேசுவதாக கூறிச் சென்றதாகவும், பேசும் போது கண்டிப்பாக பேச வைக்கிறேன் என தோழியின் கணவர் உறுதியளிக்கிறார். இதற்கிடையில் காதலனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. மாதங்கள் கழிகின்றன. தோழியின் அழைப்பு வரவில்லை. தோழி கணவரை ஐஸ்வர்யா நெருக்கிறார். இந்நிலையில் ஒருநாள் ஐஸ்வர்யாவுக்கு மெஜேஜ் ஒன்று வருகிறது. தான் புதுச்சேரியில் இருப்பதாகவும் வந்து சந்திக்குமாறு தோழி பெயரில் அந்த மெஜேஜ் வருகிறது. அவர் புறப்படும் போது, அவரது காதலனும் உடன் செல்கிறார். அங்கு பார்த்தால் தோழியின் கணவர் உள்ளிட்ட சிலர் இருக்கின்றனர். தோழி இல்லை. தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவருகிறது. அப்போது தான் படத்தின் முக்கிய டுவிஸ்ட் ஒப்பனாகிறது. உடன் வந்த தனது காதலன் தான், மாயமான தனது தோழி சூர்யா என்பதை அங்கிருந்தவர்கள் கூற, தனது காதலன்ஒரு திருநம்பி என்பது தெரியவருகிறது. சிறு வயதிலிருந்தே திருநம்பியாக தன்னை உணர்ந்த சூர்யா, ஐஸ்வர்யாவை விரும்பியதும். பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொண்டதும், பின்னர் கணவரிடம் விபரத்தை கூறியதால், டாக்டர் கணவரின் உதவியோடு அவர் ஆணாக மாற சிகிச்சை எடுத்து, திட்டமிட்டு ஐஸ்வர்யாவை காதலித்ததும், அதற்காக நடந்த வேலைகள் தான் இந்த மாய டிராமா என்பதும் தெரியவருகிறது. இறுதியில் திருநம்பியான தனது காதலனை ஐஸ்வர்யா ஏற்றாரா? இல்லையா? என்பது தான் க்ளைமாக்ஸ்.


பளபளக்கும் காதல் கதையாக துவங்கி, பின்னர் த்ரில்லர் களத்திற்கு மாறி, பின் சஸ்பென்ஸ் ஜானருக்கு தாவி, இறுதியில் சோஷியல் ஸ்டோரியாக வந்து நிற்கும் திரைக்கதை. ஐஸ்வர்யா இன்ஸ்பெக்டர் என்பதை அவர் ஒருமுறை அணியும் யூனிபார்மை வைத்து தான் அவ்வப்போது உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. பஸ்சில் பயணம் செய்வதில் ஆகாட்டும், மற்றவர்களிடம் பேசும் போதாக்கட்டும் ஆண்டிப்பட்டி அன்புச்செல்வியாகவே தெரிகிறார். தர்மதுரையில் வரும் அதே அண்ணே... வசனத்தை அதே ஸ்லாங்கில் பயன்படுத்தும் போது இன்ஸ்பெக்டர் தானா என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. காரில் எரிந்து எலும்புக்கூடான தோழியின் உடலை வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்வது போன்று காட்டுவதும், ஒரு போலீஸ்காரர், தான் காதலிக்கும் நபர் யார் என்கிற அடிப்படையை கூட அறிந்திருக்காமல் இருப்பதும், சம்மந்தமே இல்லாமல்  புதுச்சேரிக்கு கிளைமாக்ஸ் காட்சியின் கதைக்களத்தை மாற்றியதும் ஏன் என்பது இயக்குனருக்கே வெளிச்சம். 


அவராக இருப்பாரோ... இவராக இருப்பாரோ... என்கிற சஸ்பென்ஸ் கட்டாயம் இருக்கிறது. ஆனால், இப்படி ஒரு டிவிஸ்ட் யாரும் எதிர்பாராதது தான், என்றாலும் அதையும் ஒரு கட்டத்தில் யூகிக்க முடிகிறது. பரபரப்பாக நகர்த்த முயற்சித்திருக்கும் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தியிருக்கலாம். என்றாலும், லாஜிக்கை கடந்து ஒரு முறை பார்க்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே ஒவ்வொரு பிரேமிலும் வருகிறார். அவரது காதலனான சுபாஷ் செல்வன் கூட அந்த அளவுக்கு பிரேமில் வரவில்லை. தோழியாக அனன்யா, தோழியின் கணவராக கோகுல் ஆனந்த் ஆகியோர் தன் பணிகளை நிறைவு செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் கேமரா திரைக்கதையோடு நகர்ந்திருக்கிறது. சதீஷ் ரகுநாதனின் பின்னணியும் சஸ்பென்ஸ் தருகிறது. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், தான் நினைத்ததை படமாக்கியிருக்கிறார். அதை ரசிப்பது, அவரவர் மனநிலை பொருத்தது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‛திட்டம் இரண்டு’ ஒரு முறை பார்க்கும் படம்!